கோஸ்டல் பார்டரை சுற்றி மேகங்கள்.. சென்னையில் நாளை வரை வெளுக்கும் மழை.. வெதர்மேன்
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த 29 ஆம் தேதி தொடங்கியது. தென் மேற்கு பருவமழை தாமதமாக விலகியதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

தமிழ்நாடு வெதர்மேன்
அந்த வகையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை எல்லையை மழை வந்தடைந்துவிட்டது. காலை வேளையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும். கடலோர பகுதிகளுக்கு நல்ல மழையை கொடுக்கும். சென்னை எல்லைக்கு ஒரு வழியாக வந்த மேகக் கூட்டங்களால் இனி மழை அதிகரிக்கும்.

இரவு நேரங்கள்
இரவு நேரங்களிலும் மழையின் தீவிரம் அதிகமாகவே இருக்கும். வடதமிழக கடலோரத்தில் நிறைய மேகக் கூட்டங்கள் குழுமியுள்ளன. அவை மெல்ல மெல்ல உள்ளே வரும். அலுவலகங்களுக்கு கிளம்பும் போது திரும்பி வரும் போது மழை பெய்யும் என்பதால் தயார் நிலையில் செல்லுங்கள்.

சென்னை, காஞ்சிபுரம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இன்று முதல் நாளை வரை மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வெதர்மேன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். நேரம் செல்ல செல்ல சென்னை கடலோர பகுதியில் புதிய மேகக் கூட்டங்களும் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நவம்பர் 1, 2, 3 ஆகிய நாட்கள் சென்னையில் மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழை
இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது. நந்தனம், கோயம்பேடு, அமைந்தகரை, முகப்பேர், அம்பத்தூர், விமான நிலையம், தாம்பரம், மயிலாப்பூர், மந்தவெளி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. அது போல் புறநகர் பகுதிகளான ஆவடி, மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் தூரல் இருந்தது.












Click it and Unblock the Notifications