சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் டமால் டுமீல் இடியுடன் கூடிய மழை.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்
Recommended Video
சென்னை: சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் நல்ல மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் நல்ல செய்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் மழையில்லாததால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வெப்பச்சலனத்தால் மழை பெய்தது. சிறிய மழை என்றாலும் 196 நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் வெப்பச்சலனத்தால் நிலத்தடி நீர் ஏதும் உயரவில்லை. தண்ணீருக்காக மக்கள் திண்டாடி வருவது தொடர்ந்துதான் வருகிறது. இந்த நிலையில் தமிழகத்துக்கு நல்ல காலம் பிறக்கிறது என்பது போல் வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு போஸ்ட்டை போட்டுள்ளார்.
இடைவேளை
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இமயமலையில் ஏற்பட்ட தடுப்பு காரணமாக வரும் 9ஆம் தேதி முதல் பருவமழையில் இடைவேளை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இடைவேளை ஏற்படுவது இந்தியாவுக்கு நல்லதல்ல. ஆனால் தமிழகத்துக்கு நல்ல செய்தியாகும்.
தமிழகத்தில்
பருவமழை இடைவேளை விடுவதால் தமிழக கடலோர மற்றும் உள் மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் வெப்பசலனத்தை ஏற்படுத்தி மழையை கொடுக்கும். கடந்த 2017-ஆம் ஆண்டு வட தமிழகத்தில் ஆகஸ்ட் - செப்டம்பர் வரை பருவமழை இடைவேளையில் பெய்த மழையை யாராலும் மறக்க முடியாது.
பலத்த மழை
எனவே வரும் ஜூலை 9-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்யும். உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் அடுத்த வாரம் மிக கனமழை பெய்யும். குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மும்பைக்கு அருகே மிக மெதுவாக நகர்வதால் மும்பை கடலோர பகுதியில் இன்று மாலை முதல் நாளை வரை மிகப் பலத்த மழை பெய்யும்.
வறண்ட வானிலை
அடுத்த 3 நாட்களுக்கு கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. கர்நாடகம், கேரளம், தமிழகம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தாலும் நாட்டின் பிற பகுதிகளில் வறண்ட வானிலைதான் காணப்படும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.