சிறுத்தையை களத்தில் இறக்கிவிட்டு ஆர்.எஸ்.எஸ்- க்கு எதிராக திமுக மாஸ் கேம்- சிண்டு முடியும் பாஜக!
சென்னை: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் தலைமையிலான அனைத்து அரசியல் கட்சிகளையும் களத்தில் இறக்கிவிட்டு திமுக அதிரடியான வியூகத்துடன் காய்நகர்த்தி வருகிறது. இந்த வியூகத்தை எதிர்கொள்ள முடியாமல், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் திமுகவுக்கும் சிண்டு முடியும் வேலையில் இறங்கி உள்ளது பாஜக.
தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவோம் என்றது ஆர்.எஸ்.எஸ். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் 28-ந் தேதிக்குள் தமிழக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கான அனுமதி குறித்து முடிவு எடுக்க வேண்டும் என கூறியதுடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கும் ஊர்வலத்துக்கான நிபந்தனைகள் விதித்தது.
PFI மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் 1991 போல திமுக அரசு டிஸ்மிஸ்-பாஜக எச்.ராஜா பகிரங்க மிரட்டல்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் இப்படியான ஒரு ஊர்வலத்தை வட இந்தியாவைப் போல நடத்த முயற்சிப்பது வாடிக்கைதான். அதனைத் தமிழக அரசுகள் கடுமையாக எதிர்ப்பது; தடை விதிப்பதும் தொடர் கதைதான். இப்போது திமுக ஆட்சி நடைபெறுவதால் திமுகவின் சித்தாந்த எதிரியான ஆர்.எஸ்.எஸ். கடும் நெருக்கடியை தர முயற்சிக்கிறது. திமுகவை எதிர்க்கும் கட்சிகளும் இதனை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன. ஆனால் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவோ, பல்வேறுபட்ட அனுபவங்களின் அடிப்படையில் நிதானமான காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.
களத்தில் விடுதலை சிறுத்தைகள்
ஆளும் திமுகவின் மவுனமான வியூகத்தால்தான் இப்போது அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் ஊர்வலத்துக்குப் எதிராக அக்டோபர் 2-ந் தேதி, சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்தப் போவதாக திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அத்துடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
விஸ்வரூபம் எடுத்த மனித சங்கிலி
இப்போது அக்டோபர் 2-ந் தேதி ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க மனித சங்கிலியானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மனித சங்கிலியில் முதலில் இடதுசாரிகள் இணைந்தன. அதாவது இடதுசாரிகள்- விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து இந்த மனித சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக, அதிமுக அல்லாத பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள் பெருந்திரளாக பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
வைகோ ஆதரவு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், இந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி மக்களை வர்ணாசிரம அடிப்படையில் பிளவுபடுத்தும் சங் பரிவார் சக்திகள் அண்மைக்காலமாக தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இப்படிப்பட்ட சூழலில் உத்தமர் காந்தியார் பிறந்த நாள் - பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் ஆகிய சிறப்பிற்குரிய அக்டோபர் 2, அன்று நடைபெற உள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மறுமலர்ச்சி தி.மு. கழகம் இணைந்து பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என அறிவித்துள்ளார்.
வீரமணி ஆதரவு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக நல்லிணக்கத்தை முன்னிறுத்தி அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனித சங்கிலி இயக்கத்தினை திராவிடர் கழகம் வரவேற்கிறது. மதத்தை முன்னிறுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளில் சங் பரிவார் சக்திகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இவற்றை அனுமதித்தால் அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின் அமைதி நிலை பாதிக்கப்படும். இதனைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது - கூடாது என கூறியுள்ளார். அதாவது ஆளும் திமுக தவிர அதன் ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளும் இந்த மனித சங்கிலியில் இணைகின்றன. திமுகவை கடுமையாக விமர்சிக்கக் கூடிய நாம் தமிழர் கட்சியும் இதில் பங்கேற்கும் என சீமான் அறிவித்துள்ளார். தமிழக அரசியலை அறிந்தவர்களுக்கு, இது ஆளும் திமுக அரசின் செம்ம மாஸ்கேம் என்பது புரியாமல் இல்லை.
பற்ற வைக்கும் பாஜக
ஆனால் இப்படி ஒட்டுமொத்தமாக அனைத்து கட்சிகளும் தங்களுக்கு எதிராக வரிந்து கட்டுவதால் பதறிப் போய் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சிண்டு முடியும் வேலையில் பாஜக களமிறங்கி உள்ளது. பாஜகவின் துணைத் தலைவரான நாராயணன், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள PFI தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தி மு க கூட்டணி கட்சிகளை தன் பக்கம் இழுத்து, அந்த கூட்டணியின் மையமாக முயற்சிக்கிறார் திருமாவளவன் என்று தி மு க கடும் கோபத்தில் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என ஒரு ட்விட்டர் பதிவைப் போகிற போக்கில் பொட்டுவிட்டிருக்கிறார்.. அதாவது கொளுத்திப் போடுகிறதாம் பாஜக!