அமமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி… நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
Recommended Video

சென்னை: டிடிவி தினகரனின் அமமுகவுடன் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக்கட்சி கூட்டணி அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நடைபெறும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் அமைந்துள்ளன. தேர்தல் பிரச்சாரமும் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, கூட்டணிக்கான கதவை திமுக மூடி உள்ள நிலையில், தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எஸ்டிபிஐ-க்கு ஒரு இடம்
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த டிடிவி தினகரன் அணி, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என முடிவெடுத்துள்ளது. அந்த கட்சியுடன் எஸ்டிபிஐ கூட்டணி வைத்துள்ள நிலையில், ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

38 தொகுதிகள் போட்டி
மேலும், தங்கள் அணியுடன், மற்றொரு கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அந்த அணிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் மற்றும் 38 தொகுதிகளில் தங்கள் அணியைச் சேர்ந்தவர்கள் களமிறக்கப்படுவார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.

நாளை அறிவிப்பு?
தற்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி அமமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் விளக்கம்
முன்னதாக, பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணி தொடர்பாக பல கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தின என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை எனவும் விளக்கம் அளித்தார். ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக மோசமாக பேசியவர்களுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி வைத்துள்ளதாக பாமகவை மறைமுகமாக தாக்கினார்.












Click it and Unblock the Notifications