"60 மணி நேரம் பெண் அதிகாரிகளையும் அமலாக்கத்துறை சிறைபிடித்து வைத்தது”.. டாஸ்மாக் வைத்த பரபர வாதம்!
சென்னை: 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத் துறையினர் சிறை பிடித்து வைத்ததாக டாஸ்மாக் தரப்பு வாதம் வைத்துள்ளது. இதையடுத்து, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள், டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி, ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது டாஸ்மாக். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பரபர வாதங்களை முன்வைத்துள்ளது டாஸ்மாக் தரப்பு.

டாஸ்மாக் தரப்பு வாதம்
டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வழக்கறிஞர், "சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17-ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா? 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்க துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்." என வாதங்களை அடுக்கினார்.
நீதிபதிகள் கேள்வி
இதையடுத்து, எதற்காக சோதனை நடத்தப்படுகிறது என அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினீர்களா? இரவு நேரத்திலும் சோதனை நடத்தப்பட்டதா? என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை தரப்பு, "நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை" எனத் தெரிவித்தது.
இதையடுத்து, "எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு. அமலாக்கத் துறை சோதனை நடத்த காரணமான வழக்குகள், விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
டாஸ்மாக்கில் ED ரெய்டு
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை அண்மையில் வெளியிட்டது.
டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அந்த அறிக்கையில் தெரிவித்தது.
இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை
மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையையும், அதில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் தான் இன்று காரசாரமாக வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் முடிவில், டாஸ்மாக் நிறுவனம் மீது அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்க வரும் மார்ச் 25 வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications