டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு லீவு.. நேற்றே அலை அலையாய் திரண்ட மதுப்பிரியர்கள்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று முதல் மூன்று நாட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதால் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய உள்ளதால், தேர்தல் ஆணைய விதிகளின்படி மதுபானக்கடைகள் மூடப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டதால், நேற்றே மதுப்பிரியர்கள் கடைகளில் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை
குறிப்பிட்ட தினங்களில் மது விற்பனை செய்தாலோ மதுக்கடைகள் மதுபான கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற மதுபான பார்களின் விற்பனை நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்கள் முன்னெச்சரிக்கையாக நேற்றே வாங்கி ஸ்டாக் வைக்க தொடங்கினர். கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஆனால் அதையும் மீறி சில இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால் விலை பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் சிலர் மூன்று நாட்களுக்கும் சேர்த்தே வாங்கி சென்றதையும் பார்க்க முடிந்தது. நேற்று பிற்பகல் முதலே டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
பண்டிகை நாட்களை போல விற்பனை
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட நேற்றும் இந்த நிலையையே பார்க்க முடிந்தது. சென்னையிலும் டாஸ்மாக் கடைகளில் நேற்று காலை முதலே மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இது குறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "பண்டிகை விடுமுறை நாட்கள் போல நேற்று டாஸ்மாக்கில் விற்பனை அதிகமாக இருந்தது.
பண்டிகை நாட்களில் ஒருநாளுக்கு விற்கப்படும் மதுவிற்பனை அளவை விட நேற்று மதுவிற்பனை அதிகமாக நடைபெற்று இருக்க வாய்ப்பு உள்ளது" என்றனர். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நாட்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். இது தவிர மே 4 ஆம் வாக்கு எண்ணிக்கை நாளன்றும் டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் உத்தரவு
விற்பனை மட்டுமின்றி, மதுபான தயாரிப்பு, மதுபானங்களை வாகனங்களில் கொண்டு செல்லுதல் என அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தாவது:-
வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் ஏப்ரல் 21 மற்றும் 22 தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகளிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications