"மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள்.." படுவேகமாக ரெடியாகும் லிஸ்ட்! ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு! சூப்பர்
சென்னை: தமிழ்நாடு முழுக்க பல டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுக்க மது விற்பனை என்பது அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் மூலமே நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் பண்டிகை காலத்தில் விற்பனை மேலும் அதிகமாகவே இருக்கிறது.

அதேநேரம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி வருவதாகவும் இதனால் தமிழ்நாட்டில் மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
டாஸ்மாக்: தமிழ்நாட்டில் உள்ள பல அமைப்புகள் இதை வலியுறுத்தி போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் சட்டசபையில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். இதனிடையே இதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகளைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கண்டறி மாவட்ட அளவில் டாஸ்மாக் நிர்வாகம் குழுக்களையும் கண்டறிந்துள்ளது. மேலும், பொதுமக்களிடம் இருந்து அதிக புகார்கள் வரும் டாஸ்மாக் கடைகளையும் கண்டறிந்து வருகின்றனர்.
புகார்கள்: அதிக புகார்கள் வரும் கடைகளுக்கு முன்னுரிமை அளித்து பட்டியலைத் தயார் செய்வதாகவும் அரசு உரிய அறிவிப்பை வெளியிட்ட உடன் டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுக்க 5,329 கடைகள் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 1.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் சராசரியாக 2, 3 லட்சத்திற்குத் தினசரி விற்பனை இருக்கிறது. இந்தச் சூழலில் தான் டாஸ்மாக் கடைகள் கண்டறிந்து மூடும் நடவடிக்கையில் அந்த நிர்வாகம் இறங்கியுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்: கோயில்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த கடைகள், வீதிகளை மீறிய கடைகள் என ஏற்கனவே 97 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். புகார்கள் அதிகம் வரும் கடைகளை இன்னும் ஓரிரு வாரத்தில் மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் எம்ஆர்பி விலையைக் காட்டிலும் கூடுதலாக 5- 10 ரூபாய்க்கே அனைத்து மதுபானங்களும் விற்பனை செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து அவ்வப்போது வீடியோக்களும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இருப்பினும் இதுபோல அதிக விலைக்கு விற்ற 1912 டாஸ்மாக் விற்பனையாளர்கள் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புகார் தரலாம்: மேலும், எம்ஆர்பி விலையைக் காட்டிலும் நிச்சயமாகக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தாண்டியும் அதிக விலைக்கு மதுவை விற்பனை செய்தால் வாடிக்கையாளர்கள் இது தொடர்பாகப் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications