டாஸ்மாக் வழக்கு.. ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிரான ஆவணங்கள் போதாது.. EDக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்ய ஆவணங்கள் போதுமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாளை கூடுதல் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் டாஸ்மாக் முறைகேடு நடந்ததாக கூறப்படும் நாட்களில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்ததாக வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. மதுபானம் கொள்முதல் உட்பட சுமார் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இதனைத் தொடர்ந்து கூடுதல் ஆதாரங்களை கைப்பற்ற கடந்த மே மாதம் சென்னையின் பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.

அமலாக்கத்துறை ரெய்டு
குறிப்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. ரெய்டு முடிவில் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. அதேபோல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் வழக்கு
ஆனால் இவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
ஆவணங்களை கொடுத்த ED
அப்போது நீதிபதிகள், எதனடிப்படையில் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பியது. இதற்கு ஜூன் 17ஆம் தேதியான இன்று பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணை வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் சீல் வைக்கப்பட்ட சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
போதுமானதாக இல்லை
அதனை பார்த்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் அறிக்கையாக உள்ளதே தவிர, போதுமானதாக இல்லை. ஆவணங்கள் எங்கே? வீட்டில் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ், வீடு சீல் வைக்கப்படவில்லை. தங்களை கேட்காமல் வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம் என்று மட்டுமே நோட்டீஸ் ஒட்டியதாக பதில் அளித்தார்.
டென்ஷனான நீதிபதிகள்
அதற்கு நீதிபதிகள், அதற்கு என்ன அர்த்தம்.. வீட்டிற்குள் செல்ல அமலாக்கத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டுமா? என்று கேள்வி கேட்க, உடனடியாக நோட்டீஸை அகற்றிவிடுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் நீதிபதிகள், நோட்டீஸ் ஒட்டுவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத போது, சட்டவிரோதமான செயல்பாட்டை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம் என்று அதிருப்தி தெரிவித்தனர்.
பள்ளிக்கு சென்ற ஆகாஷ் பாஸ்கரன்
இதன்பின் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2014 முதல் 2021 வரை பார் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. முறைகேடு நடந்ததாக கூறப்படும் நாட்களில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின் நாளை போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு நாளை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications