டாஸ்மாக்-குக்கு பூட்டு..குடிகாரர்களுக்கு ஷாக் செய்தி! அதிகாலையில் கவனிப்பு..கடையில் கூட்டம் அதிகரிப்பு
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதல் அதாவது 21, 22, 23 மற்றும் மே நான்காம் தேதி டாஸ்மாக் மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை 'கவனிக்க' தொடங்கி இருக்கின்றனர். தற்போது கைகளில் பணம் இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதோடு விற்பனையும் அதிகரித்துள்ளது.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. சூறாவளி சுற்றுப்பயணத்தை கிட்டத்தட்ட நிறைவு செய்துள்ள வேட்பாளர்கள் நாளை மாலைக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும்.

இதற்கிடையே தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் இறுதிக்கட்ட வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை தேர்தல் மிகவும் சவாலானதாக இருக்கும் என்பதால் எல்லாவித ஆயுதங்களையும் எடுத்து பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
அதில் முக்கியமான ஆயுதம் வாக்காளர்களை 'கவனிப்பது'. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை 3 மணியிலிருந்து வாக்காளர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆயிரம் ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வீடுவீடாக வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு சில தொகுதிகளில் அனைத்து வாக்காளர்களுக்கும் பணப்பட்டுவாடா முடிவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க வேட்பாளர்கள் வழங்கும் பணம் மீண்டும் அரசுக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் குடிகாரர்கள். 2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நாளை முதல் அதாவது 21, 22, 23ஆம் தேதிகளில் டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே நான்காம் தேதியும் டாஸ்மாக் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் குடிகாரர்கள் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மது பாட்டில்களை வாங்க தொடங்கி இருக்கின்றனர். குறிப்பிட்ட தினங்களில் மது விற்பனை செய்தாலோ மதுக்கடைகள் மதுபான கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற மதுபான பார்களின் விற்பனை நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பிளாக்கில் சரக்கு வாங்கினால் அதிக செலவாகும் என்பதால் குடிகாரர்கள் தற்போது சரக்குகளை வாங்கி வைக்க தொடங்கி உள்ளனர்.
தற்போது காலையிலிருந்து அரசியல் கட்சியினர் ஆயிரம் ரூபாய் 3000 ரூபாய் வரை பணம் வழங்கி வரும் நிலையில் அதை வைத்து மூன்று நாட்களுக்கு தேவையான மதுபானங்களை வாங்கி வைத்து வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட அளவு மது விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிகளையும் மீறி ஒரு நபருக்கு ஐந்து முதல் 10 ஃபுல் வரை கூட விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கள்ளச் சந்தையில் விற்கலாம் என பலரும் தற்போது மதுபான பாட்டில்களை வாங்கி வைக்க தொடங்கி இருக்கின்றனர்.
வழக்கமாக திங்கள் செவ்வாய்க்கிழமைகளில் ஒவ்வொரு டாஸ்மாக் மதுக்கடையிலும் 300 முதல் 400 மது பாட்டில்கள் வரை விற்பனை ஆகும். ஆனால் இன்று கடை திறந்த உடனே கூட்டம் அலைமோதியதாக கூறுகின்றனர் டாஸ்மாக் பணியாளர்கள். அதுமட்டுமில்லாமல் வழக்கத்தை விட இன்றைய தினம் கூடுதல் சரக்குகளை வாங்கி இருப்பு வைத்திருப்பதாகவும் விற்பனை தீபாவளி பொங்கலை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications