டாடா அசத்தல்.. தமிழகத்திற்கு 40, 032 பிசிஆர் கிட்களை வழங்கியது.. கொரோனா கண்டறிவதற்கு ரொம்ப அவசியம்
சென்னை: கொரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்கு, தமிழக அரசுக்கு, டாடா நிறுவனம் சார்பில் 40, 032 பிசிஆர் கிட் (PCR Kits) வழங்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 8 கோடி என்று கூறப்படுகிறது. மொத்தம் 40 ஆயிரத்து 32 உபகரணங்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு போன்ற பேரிடர் கால கட்டங்களில் எந்த சர்வதேச நிறுவனமும் பெரிதாக நமக்கு உதவிக்கரம் நீட்டுவது இல்லை. மண்ணின் மைந்தர்கள் தொடங்கி நடத்தி வரக்கூடிய நிறுவனங்கள் தான் நமக்கு கை கொடுக்கின்றன.
பொதுவான கால கட்டங்களில் நாம் அந்நிய பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், அதையெல்லாம் மறந்து நமக்கு உதவிக்கரம் நீட்ட ஓடோடி வருவது நம்ம ஊர் நிறுவனங்கள்தான். அப்படித்தான் பிரதமரின் நிவாரண உதவி மற்றும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இந்தியாவின் தொழிலதிபர்கள் கோடி கோடியாக உதவி செய்து வருகிறார்கள். அதில் டாடா நிறுவனம் முக்கியமான ஒன்று.
டாடா நிறுவனம் இது போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளதற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துக்கொண்டு வைத்திருக்கிறார்.
பிசிஆர் கிட்ஸ் என்பவை, நோயை சரியாக கண்டுபிடித்துவிடும். Polymerase chain reaction என்பதன் சுருக்கம்தான், பிசிஆர். அதிக ஆபத்து உள்ள நோயாளிகளுக்கு ரேப்பிட் டெஸ்ட் கிட்ஸ் பலன்தராது. பி.சி.ஆர் சோதனைதான் சரியாக கண்டுபிடிக்கும்.
சமூக அளவிலான பரவலான சோதனைகளுக்கு வேண்டுமானால், ரேப்பிட் டெஸ்ட் பயன்படும். ரேப்பிட் டெஸ்ட்டில், பாசிட்டிவ் காட்டினால் உடனே சிகிச்சை தொடங்கப்படாது. பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தி, அதிலும் பாசிட்டிவ் வந்தால்தான், சிகிச்சை கொடுக்கப்படும். எனவேதான் ரேப்பிட் டெஸ்ட் கருவி சீனாவிலிருந்து இன்னும் தமிழகம் வராதது குறித்து பெரிதாக சுகாதாரத்துறை கவலைப்படவில்லை.
ரேப்பிட் டெஸ்ட் கருவிகள் மருத்துவ முறை மீதான அழுத்தத்தைக் குறைக்கும், மேலும் அதிக சோதனைகளை நடத்த வாய்ப்பு ஏற்படும். இதனால்தான் ரேப்பிட் டெஸ்ட் கருவி தேவை. ஆனால் டாடா கொடுத்துள்ள பிசிஆர் வகை சோதனை கருவிகள்தான், மிகவும் துல்லியமானவை. எனவே, தமிழகத்திற்கு இந்த கருவி நல்ல பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications