பல் பிடுங்கிய பல்வீர் சிங்.. அதுவும் "இடுக்கி"யில்?.. மனித உரிமை ஆணையம் முன்பு இன்று ஆஜராகி விளக்கம்
சென்னை: நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி ஏப்ரல் 3-ம் தேதி அதாவது இன்றைய தினம், விளக்கம் அளிக்கவேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.. அந்தவகையில், இன்றைய தினம் ஏஎஸ்பி நேரில் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார்... அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறைக்கு இவர் பொறுப்பேற்றபிறகு, விசாரணை முறையே வித்தியாசமானதாக மாறியது..
சின்ன சின்ன குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக பரபரப்பான சர்ச்சை கிளம்பி உள்ளது..

கருங்கற்கள்
அதாவது, இடுக்கியை பயன்படுத்தியே, பற்களை பிடுங்கி எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.. கருங்கற்களை வைத்து, பற்களை பிடுங்கியதாகவும் சொல்கிறார்கள். இதனால் வலி பொறுக்க முடியாமல், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பற்களை பிடுங்கி தண்டனை அளிக்கும் ஏஎஸ்பி, கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அறிக்கை தாக்கல்
இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது. நாளிதழில் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தது.

விசாரணை குழு
இந்நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி முத்து, சுபாஷ், வேத நாராயணன் உள்ளிட்ட 5 பேர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைவர் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை ஆஜராகினர். இவர்களிடம் எஸ்பி, மகேஸ்வரன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஆஜரான 5 பேரிடம், பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

எகிறும் டென்ஷன்
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் ஏப்ரல் 3ம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.. அதன்படி, இன்றைய தினம் ஏஎஸ்பி விளக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில், கல்லிடைக்குறிச்சி காவலர் ராஜ்குமார் மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவலர் போகபூமன் ஆகியோர் நேற்றைய தினம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications