தேஜஸ் ரயிலுக்கு தாம்பரத்தில் ஸ்டாப்.. துவக்க விழாவில் திமுக எம்பி டிஆர் பாலு கோபம்.. என்னாச்சு?
சென்னை- மதுரை இடையே இயங்கி வரும் தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் தாம்பரத்தில் நின்று செல்லும் வகையிலான விழாவில் திமுக எம்பி டிஆர் பாலு பங்கேற்றார்.
சென்னை: சென்னை-மதுரை இடையே அதிவேக தேஜஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதற்கான விழா இன்று தாம்பரத்தில் நடந்தது. விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன், திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டவர்கள் பங்கேற்று பச்சை கொடியசைத்தனர். இந்த வேளையில் திமுக எம்பி டிஆர் பாலு ரயில்வே அதிகாரிகள் மீது கோபம் கொண்டு அதிருப்தியை வெளிக்காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை - மதுரை இடையே தேஜஸ் விரைவு ரயில் இயங்கி வருகிறது. வியாழக்கிழமையை தவிர்த்து இந்த ரயில் பிற 6 நாட்களும் இயங்கி வருகிறது. சென்னை - மதுரை இடையேயான இந்த ரயிலின் பயண நேரம் என்பது 6 மணிநேரமாக உள்ளது. இந்த ரயில் வாரந்தோறும் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்கி வருகிறது.
அதன்படி காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தேஜஸ் ரயில் (22671) மதியம் 12.15 மணிக்கு மதுரை செல்லும். மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ்
இந்நிலையில் தான் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று சென்றால் தென்மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவார்கள் என நீண்டகாலமாக கோரிக்கைகள் இருந்து வந்தது. இதற்கு 2 நாட்களுக்கு முன்பு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இன்று முதல் தேஜஸ் ரயில் சோதனை அடிப்படையில் 6 மாதம் வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா இன்று காலை நடந்தது.

துவக்க விழா
அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வந்து நின்றது. ரயிலில் பயணிகள் ஏறிய நிலையில் மத்திய அமைச்சர் எல் முருகன், திமுக எம்பி டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள் பச்சைக்கொடி அசைத்து தாம்பரம் ஸ்டேஷனில் நின்ற ரயிலை பச்சைக்கொடி அசைத்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு எல் முருகன் கூறுகையில், ‛‛விரைவில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது'' என்றார்.

டிஆர் பாலு கோபம்
இந்நிலையில் தான் இந்த விழாவில் திமுக எம்பி டிஆர் பாலு அதிகாரிகள் மீது கோபமடைந்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது விழாவுக்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்படாமல் இருந்ததோடு, குறித்த நேரத்தில் விழாவை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் டிஆர் பாலு கோபப்பட்டு அதிருப்தி அடைந்துள்ளார்.

நடந்தது என்ன?
இதுபற்றி டிஆர் பாலு கூறுகையில்,‛‛குறித்த நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறவில்லை. நாங்கள் இருந்த சீட்டின் பெயர்கள் தெரியவில்லை. சீட் மறைக்கும் அளவுக்கு எங்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளனர். இவ்வளவு முறைகேடுகள் ரயில்வே துறையில் நடந்துள்ளது. இதனை எதிர்க்காமல் எப்படி இருக்க முடியும். இதனால் தான் விழாவில் பேசவில்லை. மேடையில் மின்விளக்கு வசதி இல்லை. அமைச்சர் பேச முயன்றபோது ரயில் புறப்பட்ட பிறகு பேச வேண்டும் என்றனர். நாங்கள் இருட்டில் நின்றோம். அமைச்சர் ரயில் போன பிறகு பேசுவார். எங்களுக்கு பேச நேரம் கிடைக்காது என்பது தானே இதற்கு அர்த்தம்'' என அதிருப்தியை வெளிக்காட்டினர்.












Click it and Unblock the Notifications