விடியல் இருக்கும் என்றார்கள்.. தண்ணீர் வடியல் கூட இல்லையே.. வெள்ள பாதிப்பு பற்றி தமிழிசை கவிதை
சென்னை: விடியல் பிறக்கும் என்றார்கள் ஆனால் தண்ணீர் வடியல் கூட இல்லையே என தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கவிதை வடிவில் விமர்சனம் செய்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் தலைநகரான சென்னையை உலுக்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 4, 5 ஆம் தேதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னையில் 36 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பெரு மழையால் ஒட்டுமொத்த மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. மழை விட்டு சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், படிப்படியாக சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

எனினும், புறநகர் மற்றும் வட சென்னையில் உள்ள சில பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கும் முழு வீச்சில் இயல்பு நிலையை மீட்டெடுக்க மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, சென்னை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால்தான் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌவந்தரராஜன் விடியல் பிறக்கும் என்றார்கள் ஆனால் தண்ணீர் வடியல் கூட இல்லையே என கவிதை வடிவில் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக தமிழிசை சவுந்தராஜன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இது மழையின் தண்ணீர் கவிதையல்ல....
இது மக்களின் கண்ணீர் கவிதை....
என்னை....
உன்னை.... வளர்த்த சென்னை... வெள்ளத்தில் தத்தளிக்கிறது
மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை...
மக்களின் கண்ணீர் வற்றவில்லை....
விடியல் இருக்கும் என்றார்கள்....
தண்ணீர் வடியல் கூட இல்லையே....
அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்...
இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது...
அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?
சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்...
பூராக தண்ணீர் வடியும் ஊராக கூட ஆக்கவில்லையே....
பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே....
பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே....
கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்....
இன்று சென்னையே கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்...
குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்....
பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை....
பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்....
ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்....
தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்....
பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்....
இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்....
பொருளை இழந்து வாடும் மக்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்க அருளைக்கொடு....
இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு....
பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு....
ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்....
ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்....
கூப்பிடு தூரத்தில் நான் இருந்திருந்தால்....
துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்....
கண்ணீர் துடைக்கவாது ஓடோடி வந்திருப்பேன்....
அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்....
நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்....
பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்....
தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்....
தொலைவில் இருந்தாலும் மழை வடியும் தொலைநோக்கு திட்டத்தை திட்டமிட வேண்டுமென்ற வேண்டுகோளோடு....
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications