கோவில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற முடிவு.. அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடு குறித்தும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
எவ்வளவு சொத்துக்கள் உள்ளன, எங்கெல்லாம் சொத்துக்கள் உள்ளன, அதன் தற்போதைய மதிப்பு என்ன என்று அனைத்து விவரங்களையும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

முடிவு
இந்த ஆலோசனையின் முடிவில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் வெளிப்படையாக பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.

ஸ்கேன்
திருக்கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றம் (Uploading) செய்ய வேண்டும். திருக்கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார்குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்.

சொத்துக்கள்
திருக்கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் (Scan) செய்து இணையத்தில் பதிவேற்றுதல் (Uploading). திருக்கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் திருக்கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும், என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை சொத்துக்கள் குறித்து இணையத்தில் சிலர் கடந்த சில தினங்களாக கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த சொத்துக்களை புதிய அரசு பாதுகாக்க வேண்டும், இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications