பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் போறீங்களா? ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் கேட்டால் புகார் கொடுங்க
பொங்கல் பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
சென்னை: பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார். 1800 425 6151 , 044 24749002 என ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தை பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட பலரும் விரும்புவார்கள். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் வேலை செய்பவர்கள் சொந்த கிராமத்திற்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள்.
சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் ஆம்னி பேருந்துகளில் சொகுசாக செல்ல பலரும் விரும்புவார்கள். பல ஆம்னி பேருந்துகள் கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவார்கள். அவசரத்திற்கு சொந்த ஊருக்கு சென்றே ஆக வேண்டும் என்று நினைக்கும் மக்கள் ஆம்னி பேருந்துகளில் கேட்கும் கட்டணத்தை கொடுத்து செல்வார்கள்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 , 044 24749002 என ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஜனவரி 11ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை சென்னையிலிருந்து மொத்தம் 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார். மூன்று நாட்களிலும் சென்னையிலிருந்து ஒரு நாளைக்கு 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை தவிர பிற ஊரிகளில் இருந்து ஜனவரி 11ஆம் முதல் 13ஆம் வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் முடிந்து சொந்த ஊர் திரும்ப ஏதுவாக மொத்தம் 16,709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450 , 94450 14436 ஆகிய தொலைப்பேசி மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணை.. ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன தெரியுமா?
பயணச்சீட்டை முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல www.tnstc.in , tnstc official app, ரெட்பஸ், பேடிஎம் போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
டெண்டர் பெறப்பட்ட மோட்டல்களில்தான் அரசு பேருந்துகளை நிறுத்தமுடியும். அதேசமயம் சாலையோர மோட்டல்களில் உணவின் தரம் குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உணவின் தரம், சுகாதாரப் பிரச்னைகள் குறித்து புகார்கள் உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்துசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.