அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை மதகு மீண்டும் உடைந்தது! வீணாக வெளியேறும் தண்ணீர்!
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட விழுப்புரம் தளவானூர் தடுப்பணையின் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
Recommended Video
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் தளவானூர், எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ25.37 கோடி மதிப்பீட்டிலான தடுப்பணை 2020 அக்டோபரில் கட்டி முடிக்கப்பட்டது. 400 மீட்டர் நீளமும், 3.1 மீட்டர் உயரமும்கொண்டது இந்த தடுப்பணை. மொத்தம் 3ஷட்டர்களுடன் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையை அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார்.

திடீரென உடைந்த தடுப்பணை
இந்த தடுப்பணை மூலம் தேக்கி வைக்கும் தண்ணீர் கடலுார் மாவட்டத்தில் எனதிரிமங்கலம் வாலாஜா வாய்க்கால் மூலம் கரும்பூர், கொரத்தி, திருத்துறையூர், பூண்டி, கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, புலவனுார், மேல்குமாரமங்கலம், எல்.என்.புரம், பூங்குணம், கோட்லாம்பாக்கம் என மொத்தம் 14 ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து வந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தளவானுார், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 12 கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த அணைதான் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி திடீரென உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை
கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களிலேயே தடுப்பணை உடைப்பெடுத்த காட்சியைக் கண்டு விவசாயிகள் அதிர்ந்து போயினர். அப்போது கருத்து தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மணல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்புச் சுவர் கட்டுவதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பணை என்பது நன்றாக இருக்கிறது. தற்போது தடுப்புச் சுவரில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது உடனடியாக சீர் செய்யப்படும் என்றார். அப்போது திமுகவினர் தடுப்பணையை சீரமைப்பு செய்யக் கோரி போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2-வது முறையாக உடைந்த தடுப்பணை
இந்நிலையில் தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக வடதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வடதமிழகத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில்தான் தாளவனூர் தடுப்பணையில் மதகு மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே 2 முறை தளவானூர் தடுப்பணை மீண்டும் மீண்டும் உடைந்திருப்பதை எப்போது அதிகாரிகள் சரி செய்வார்கள் என்பதுதான் பொதுமக்கள் கேள்வி.

நிரம்பும் பெருமாள் ஏரி
மேலும் கனமழையால் கடலூர் மாவட்டத்தில் ஓடும் கெடிலம், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. பெருமார் ஏரியின் முழு கொள்ளளவான 6.5 அடியில் 5.9 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 2849 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. 3359 கன அடி தண்ணீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications