வா அப்பா வர்றாரு! வெள்ளத்தில் தவித்த குழந்தையை வாஞ்சையுடன் மீட்ட தமிழச்சி தங்கப்பாண்டியன்!
சென்னை: சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில் படகு மூலம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் தென்சென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.
அப்போது குழந்தை ஒன்றை படகில் ஏற்றுவதற்காக அவர் தூக்கிய போது, அப்பாவுடன் தான் வருவேன் என அடம்பிடித்தது. தொடையளவு தண்ணீரிலும் அப்பாவை விட்டுவிட்டு தாம் மட்டும் வர முடியாது என அக்குழந்தை அடம் பிடித்த நிலையில், ''வா அப்பா வர்றாரு பாரு'' எனக் கூறி அந்தக் குழந்தையை வாஞ்சையுடன் படகில் மீட்டார். அதேபோல் அந்தக் குழந்தையின் தாய் தந்தைக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களையும் அந்தப் படகிலேயே மீட்டு அடுத்தடுத்த படகுகளில் மற்றவர்கள் வாங்க எனக் கேட்டுக்கொண்டார்.

வங்கக்கடலில் உருவான மிக் ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்க வேண்டிய பேரவலத்துக்கு ஆளானது. மீட்பர் இல்லாமல் மக்கள் கடந்த திங்கள்கிழமையும், செவ்வாய்கிழமையும் தவியாய் தவித்துப் போய்விட்டனர். இந்தச் சூழலில் தான் மூன்றாவது நாளான இன்று படகுகள் மூலம் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. 40 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் பல பகுதிகளில் இன்னும் தொலைதொடர்பு இணைப்பு சீரமைக்கப் படவில்லை. மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்ட மக்கள் மூன்று நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தான் தனது தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வேளச்சேரியில் படகில் சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.












Click it and Unblock the Notifications