மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை! மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
சென்னை: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக செயல்படுவதாக கூறி, தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் 50 இடங்களில் மாவட்ட அஞ்சல் அலுவலகங்கள் முன்பாக திரண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.
மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சி முன்வைக்கும் ஐயமாகும்.

காவிரி நீர்
தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சனையான காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், காவிரியின் குறுக்கே 1000 கோடி ரூபாய்ச் செலவில் புதிதாக மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வரும் கர்நாடக அரசு, அத்திட்டத்திற்கான பணிகளை இந்தாண்டே தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

வேல்முருகன் அறிவிப்பு
மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் பாலைவனமாகும். எனவே, நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ் நாட்டு மக்களின் இயற்கை உரிமை பறிக்க முயற்சிக்கும், கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பாக இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

வேல்முருகன் அழைப்பு
அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 50 இடங்களில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் விவசாய அமைப்பினர், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வேல்முருகன் அழைப்பை ஏற்று பங்கேற்றனர்.

மேகதாது அணை
மேகதாது அணை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை மையமாக வைத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தொடங்கியிருக்கின்றனர். நேற்றுக்கூட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சியில் கர்நாடக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications