தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்ல விரும்பவில்லை... தங்க தமிழ்ச்செல்வன்
Recommended Video
சென்னை: பாஜகவால் இயக்கப்படுகிற அதிமுகவுக்கு தன்மானத்தை இழந்து செல்ல விரும்பவில்லை என்று திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தினகரனின் அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் திமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
பாஜக இயக்கும் அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக நான்காக பிளவுபட்டது. இனி அதிமுக கட்சியே இல்லை. தற்போது அதிமுகவை பாஜக இயக்குகிறது. அதனால் தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்ல விரும்பவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. கருணாநிதி மறைந்த போது ஒரே இரவில் சட்டப்போராட்டம் நடத்தி மெரினாவில் இடம் வாங்கியவர் ஸ்டாலின்.
அரசியலில் அம்மணமாக நிற்கிறார் தினகரன்.. 'முன்னாள் ஆதரவாளர்' நாஞ்சில் சம்பத் ஆவேசம்
ஸ்டாலின் அபார வெற்றி
ஆர்.கே.நகரில் படுதோல்வி அடைந்த போதும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் மிகப் பெரும் வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார் ஸ்டாலின். அவரால்தான் தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை பெற்றுத் தர முடியும்.
குழப்பமான அதிமுக
அதிமுகவில் எந்த முடிவும் யாரும் எடுக்க முடியாத குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. திமுகவில் ஸ்டாலின் எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்படுகின்றனர்.
திமுகவில் அதிமுகவினருக்கு மரியாதை
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த செல்வகணபதி, எ.வ.வேலு, சேகர் பாபு, கலைராஜன், செந்தில் பாலாஜி என அனவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா கூறியதைப் போல மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்பதை திமுக கடைபிடித்து வருகிறது.
தேனியில் பொதுக்கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் முன்னிலையில் பல்லாயிரம் பேர் திமுகவில் சேர உள்ளனர்.
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.