வார்த்தையை விட்ட அமைச்சர் கீர்த்தனா! அடிப்படை புரிதல் கூட இல்லையே.. தங்கம் தென்னரசு அட்டாக்
சென்னை: தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். பத்தரை லட்சம் கோடி ரூபாயை எடுத்துக்கிட்டு கழுவிவிட்டுப் போய்ட்டாங்க என போகிற போக்கில் புழுதி வாரிவிட்டுச் செல்வதா? எனவும், உண்மைக்கு புறம்பாக, நிதி நிர்வாகம் குறித்து எந்த ஒரு சாதாரண புரிதலும் இல்லாமல் அமைச்சர் பேசியிருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் நேற்று வெளியானது. முதல்வர் விஜய் பதவியேற்றபோதே அவருடன் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து நேற்று அவர்களுக்கு என்னென்ன துறைகள் என்பதை விஜய் அறிவித்தார்.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா
இதில் தொழில்துறையை 29 வயது இளம் அமைச்சராக கீர்த்தனாவுக்கு ஒதுக்கினார். விஜய்யுடன் பதவியேற்ற கீர்த்தனா, அமைச்சர் ஆன சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதல் சர்ச்சையாக, பிற மொழி ஊடகம் ஒன்றிற்கு இந்தியில் பேட்டியளித்தது சமூக வலைத்தளங்களில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்தி சர்ச்சையை அடுத்து, சட்டமன்ற வளாகத்தில் அவர் பேசிய கருத்தும் விவாதமானது. "அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம், என் பேச்சு காயப்படுத்தி இருந்தால் அதற்கு நான் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்து கொள்வதாக" என கீர்த்தனா தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்தார். இதனை தொடர்ந்து முன்னாள் அரசு பத்தரை லட்சம் கோடி ரூபாய் "எடுத்துக்கிட்டு கழுவிவிட்டுப் போய்ட்டாங்க" என்று அமைச்சர் கீர்த்தனா கூறியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
சாதாரண புரிதல் இல்லாமல்
இதற்கு முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்து பதிலளித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- "பத்தரை லட்சம் கோடி ரூபாயை எடுத்துக்கிட்டு கழுவிவிட்டுப் போய்ட்டாங்க என போகிற போக்கில் புழுதி வாரிவிட்டுச் செல்வதா?.. உண்மைக்கு புறம்பாக, நிதி நிர்வாகம் குறித்து எந்த ஒரு சாதாரண புரிதலும் இல்லாமல் அமைச்சர் பேசியிருக்கிறார்..
செங்கோட்டையன் கடிவாளம் போடுவாரா
ஆதாரமற்ற மாய பிம்பப் பரப்புரை. கீர்த்தனா உள்நோக்கத்துடன், நிதி சார்ந்த அடிப்படை புரிதல் இல்லாமல் பேசியுள்ளார். அரசு நிர்வாகத்தில் அனுபவம் இல்லாததால் மக்களைக் குழப்பும் வகையில் தமிழக நிதி குறித்துத் தவறான தகவல்கள் புனைந்து பேசப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள செங்கோட்டையன் போன்றோர், தொழில்துறை அமைச்சரின் இந்தக் கற்பனைப் பேச்சுக்கு கடிவாளம் போட முன்வருவார்களா?.. அனுபவமிக்க தவெக அமைச்சர்கள் இப்படியான அடிப்படைப் புரிதல் இல்லாத கருத்துகளைத் தடுப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கம் தென்னரசு ட்விட்
தங்கம் தென்னரசு தனது ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- அமைச்சரவையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள செங்கோட்டையன் போன்றோர், தொழில்துறை அமைச்சரின் இந்தக் கற்பனைப் பேச்சுக்கு கடிவாளம் போட முன்வருவார்களா?.. அனுபவமிக்க தவெக அமைச்சர்கள் இப்படியான அடிப்படைப் புரிதல் இல்லாத கருத்துகளைத் தடுப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், "பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க" என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவர்கள் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும்.
அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களும், நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலாளர் அவர்களும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா?” என்று பதிவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications