2 பேரை கைது செய்வதில் உறுதியாக இருங்க..'தெய்வங்கள்' கைவிடாது.. திருமாவளவனுக்கு தங்கர்பச்சான் அட்வைஸ்
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான 2 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட வேண்டும்; துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால் உழைக்கும் மக்களாகிய இத்தெய்வங்கள் உங்களை கைவிடாது கடலூர் லோக்சபா தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்த இயக்குநர் தங்கர்பச்சான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமது எக்ஸ் பக்கத்தில், கள்ளக்குறிச்சியில் #நச்சு_சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மருத்துவர்களிடம் அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே இக்கொடுமையைத் தடுக்கும் நிரந்தரத் தீர்வு!தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்; தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் 24-06-2024 அன்று மாலை 3.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு பாமகவின் இயக்குநர் தங்கர்பச்சான் அளித்துள்ள பதிலில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும்,விற்பவர்களுக்கும் பாதுகாப்பளிப்பவர்கள் திமுகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என்பதை அறிந்திருப்பீர்கள்! அத்துடன் அத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சரும் பதவி விலக வேண்டும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். உழைக்கும் மக்களாகிய இத்தெய்வங்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள்! என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications