மே 4-ம் தேதி இரவே பனையூரில் நடக்க போவது என்ன? விஜய்க்கு அந்தளவுக்கு பயம் ஏன்? சொல்வது யார்னு பாருங்க
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் 4 ஆம் தேதி வெளியானதும், வெற்றி பெறும் தவெக வேட்பாளர்கள், வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டு அன்றைய தினம் இரவே பனையூருக்கு வர சொன்னது குறித்து அங்கு நடக்க போவது குறித்தும் பத்திரிகையாளர் தராசு ஷியாம் விளக்கியுள்ளார்.
தமிழக அரசியலில் 2026 சட்டசபைத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, மே 4-ஆம் தேதி இரவு பனையூர் அலுவலகத்தில் தனது வேட்பாளர்களை விஜய் அவசரமாகச் சந்திக்க அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் இது குறித்துப் பேசுகையில், விஜய்க்கு ஒருவிதமான பயம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். "தன் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அவர்களை மற்ற கட்சிகள் இழுத்துவிடுவார்களோ என்ற அச்சம் அவருக்கு இருக்கிறது.
சட்டசபைக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கட்சித் தாவல் தடைச் சட்டம் செல்லுபடியாகாது என்பதால், வெற்றிச் சான்றிதழுடன் வேட்பாளர்கள் நேராகத் தன்னிடம் வர வேண்டும் என விஜய் கட்டளையிட்டுள்ளார்.
விஜய்யின் வேட்பாளர்களில் பலர் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களின் விசுவாசம் குறித்து விஜய்க்கு சந்தேகம் இருக்கலாம். மேலும், தற்போதைய கருத்துக்கணிப்புகள் விஜய்க்கு 10 முதல் 20 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனக் கூறுகின்றன. இது நடந்தால், அது திமுகவிற்குச் சாதகமாக முடியலாம் அல்லது அதிமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கலாம்.
பலமுனைப் போட்டியில் வாக்குகள் சிதறும்போது, அதிக வாக்கு சதவீதம் வைத்துள்ள பெரிய கட்சிகளே வெற்றி பெறும் என்பது அரசியல் எதார்த்தம். விஜய்யின் அரசியல் அணுகுமுறை ஒரு 'நாடக சபா' போல இருப்பதாக விமர்சிக்கும் ஷியாம், அவர் இன்னும் களத்திற்குச் சென்று மக்களைச் சந்திக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
"சினிமா மூலம் மக்களைத் தெரிந்து கொள்வதற்கும், களத்தில் இறங்கிப் போராடுவதற்கும் வித்தியாசம் உண்டு. காந்தி கூட இந்தியா வந்ததும் முதலில் மக்களைத் தான் சுற்றிப் பார்த்தார். ஆனால் விஜய் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் மட்டுமே அரசியலை அணுகுகிறார்" என்று அவர் விமர்சிக்கிறார்.
தேர்தலுக்குப் பிறகு விஜய் ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும் ஷியாம் கேள்விக்குள்ளாக்குகிறார். பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒருவர், தேர்தல் வெற்றிக்காகக் கோவில்களுக்குச் செல்வது முரண்பாடாகத் தெரிகிறது. இது ஒருவேளை ஜோதிடர்களின் ஆலோசனையாக இருக்கலாம் என்றும், கொள்கை தெளிவு இல்லாதது விஜய்க்குப் பின்னடைவைத் தரும் என்றும் அவர் கருதுகிறார்.
இருப்பினும், இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு ஆரோக்கியமானது என்கிறார். விஜய் 2029 வரை அரசியலில் தாக்குப்பிடிப்பாரா என்பது கேள்விக்குறிதான். ஒருவேளை அவர் 10 முதல் 12 சதவீத வாக்குகளைப் பெற்றால், அது ஒரு பெரிய சக்தியாக உருவெடுக்கும். அப்போது மற்ற கட்சிகள் அவருடன் கூட்டணி வைக்க முன்வரும்.
ஆனால், விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் நடைமுறைக்குச் சாத்தியமற்ற பட்ஜெட்டைக் கொண்டிருப்பதாக ஷியாம் கூறுகிறார். மே 4-க்குப் பிறகு தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications