"பிசுபிசுத்தது?".. ஆஹா ஒரே நாளில் வந்த 2 நியூஸ்.. எடப்பாடிக்கு சக்ஸஸா? தோல்வியா? திரிசங்கு சொர்க்கம்
சென்னை: மின்கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுக்க இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. செங்கல்பட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்றார்.
மாநிலம் முழுக்க இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் மேலோட்டமாக பார்த்தால் திமுக அரசுக்கு எதிராக போராட்டம் போல தோன்றலாம். ஆனால் அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் இந்த போராட்டத்திற்கு பின்பான காரணமே வேறு என்று கூறுகிறார்கள்.
ஆளும் திமுகவை எதிர்க்கவே போராட்டம். ஆனால் அதை தாண்டி மொத்தம் இரண்டு விதமான காரணங்கள் இந்த போராட்டத்திற்கு பின் இருப்பதாக எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சொத்து வரி உயர்வுதான் திமுக அரசு கொடுத்த போனஸ்.. ஆர்ப்பாட்டத்தில் பொங்கிய எடப்பாடி பழனிசாமி!
காரணம் 1
அதன்படி அதிமுகவில் தன்னுடைய பவரை காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார். அதாவது பொதுக்குழு உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் மட்டும் தன் பக்கம் இல்லை. தொண்டர்களும் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை காட்டவே எடப்பாடி இந்த போராட்டத்தை நடத்தி உள்ளார் என்கிறார்கள். கோர்டில் சமீபத்தில் நடந்த விசாரணையில் எல்லாம், எடப்பாடிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆனால் தொண்டர்கள் ஆதரவு தனக்கே உள்ளது என்று ஓபிஎஸ் வாதம் வைத்தார்.
தொண்டர்கள்
உண்மையில் தொண்டர்கள் தனக்கே ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் வாதம் வைத்தார். இந்த நிலையில்தான் அதை முறியடிக்கும் வகையில் தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று எடப்பாடி நடத்திய பொதுக்கூட்டமும், மறுநாளே நடத்திய போராட்டமும் இதனால்தான். தமிழ்நாடு முழுக்க இதற்காக தொண்டர்களை களமிறக்கி போராட்டம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
காரணம் 2
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் தங்களை எதிர்க்கட்சி போல பாஜக முன்னிறுத்தி வருகிறது. பாஜக எதிர்க்கட்சி அல்ல. இப்போதும் திமுகவை நாங்கள்தான் எதிர்க்கிறோம். திமுகவிற்கு சரியான எதிரி நாங்கள்தான் என்றும் காட்டுவதற்காக எடப்பாடி இந்த போராட்டத்தை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு மட்டும் இந்த போராட்டம் மூலம் அவர் பதிலடி கொடுக்கவில்லை. இரண்டாம் இடத்தை பிடிக்க முயலும் பாஜகவிற்கு எதிராகவும் எடப்பாடி இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்.
செங்கல்பட்டு
இந்த போராட்டம் இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் சிறப்பாகவே நடந்தது. பல இடங்களில் எம்எல்ஏக்கள், மாஜிக்கள் சேர்ந்து போராட்டம் செய்தனர். செங்கல்பட்டில் எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டத்திலும் கூட்டம் நன்றாக இருந்தது. இதனால் எடப்பாடி ஒரு பக்கம் குஷியில் இருக்கிறார். நம் போராட்டத்திற்கு ஆள் வந்து இருக்கிறார்கள் என்று குஷியில் இருக்கிறார். முக்கியமாக பெரும்பாலான எம்எல்ஏக்கள் எடப்பாடி பக்கம்தான் இன்று இருந்தனர்.
பிசுபிசுத்தது
இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு குட் நியூஸ் வந்தாலும்.. இன்னொரு பக்கம் பேட் நியுஸும் எடப்பாடிக்கு வந்துள்ளதாம். அதன்படி இந்த போராட்டம் தென் மண்டலத்திலும், கொங்கு மண்டலத்திலும் பிசுபிசுத்துவிட்டதாக கூறப்படுகிறது. தென் மண்டலம் எங்கும் பெரிதாக நிர்வாகிகள் போராடவில்லை. தலைமை சென்னையில் கவனம் செலுத்தியது. ஆனால் தென் மண்டலத்தில் கவனம் செலுத்தாமல் மிஸ் செய்துவிட்டது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இதனால் இந்த போராட்டம் வெற்றியா.. தோல்வியா என்று தெரியாமல் ரத்தின் ரத்தங்கள் திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கி உள்ளனர்.