புதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு.. வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி
சென்னை: புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரப்படுகிறது. புதுக்கோட்டை அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மாதக் கணக்கில் கிராம மக்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மாநில அரசின் துணையுடன் மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 44 இடங்களில் துளை போட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனைக் கண்டித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜூன் 1ம் தேதி தொடர் முழக்க போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான எல்லைகளையும் வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நிலம் மற்றும் கடலில் கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏற்கனவே வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட வன்முறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications