இனி.. ஆன்லைனில் மருந்துகளை விற்கலாம்.. தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை தற்காலிக நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 17ம் தேதி விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுக்கும் வரை அதன் மீதான தடை தொடரும் என உத்தரவிட்டிருந்தார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக மத்திய அரசு வரும் 31ம் தேதிக்குள் புதிய விதிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட்டப்பட்டது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் தரப்பில் நீதிபதிகள் சத்தியநாராயண் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வில் முறையிட்டனர்.
அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள் ஆன்லைன் மருந்து விற்பனை தடைக்கு எதிரான வழக்கு,விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதித்ததிருந்த தடையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மேலும் இடைக்கால கோரிக்கையில் தீர்ப்பு வரும் வரை தனி நீதிபதியின் தீர்ப்பை நிறுத்தி வைத்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஆன்லைன் மருந்து விற்பனை செய்யக் கூடாது என்ற தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் உத்தரவிற்கு தடை விதித்தனர். மேல்முறையீடு வழக்கின் பிரதான கோரிக்கை மீதான விசாரணை வரும் ஜனவரி 24ம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயண் மற்றும் ராஜமாணிக்கம் ஒத்திவைத்தனர்.