செந்தில்பாலாஜிக்காக நேற்றைய நிகழ்ச்சிகளை ரத்து செய்த முதல்வர்! நாள் முழுவதும் ஓடிய டிஸ்கஷன்!
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் நேற்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது கவனம் ஈர்த்திருக்கிறது.
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்ற தலைப்பில் அரசின் மிக முக்கிய திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக இருந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தால் கடும் அப்செட் ஆன முதல்வர் ஸ்டாலின் அதில் கூட பங்கேற்கவில்லை.
அதேபோல் இன்னும் பல முக்கிய சந்திப்புகள் மற்றும் திட்டங்களை தொடங்கி வைத்தல் நிகழ்ச்சிகளும் ரத்தாகியுள்ளன. அமைச்சர் செந்தில்பாலாஜி கைது பற்றியும் செந்தில்பாலாஜி வகிக்கும் பதவிகளை யாருக்கு மாற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சித்தரஞ்சன் சாலை இல்லம், கார், அறிவாலயம் என எல்லா இடங்களிலும் நேற்று டிஸ்கஷன் நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுப்பது பற்றியும் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாகத் தான் நேற்று மாலையே தமிழகத்தில் சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை என்ற அறிவிப்பு கூட வெளியானதாம்.
வழக்கமாக மதிய நேரத்தில் அரை மணி நேரமாவது ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நேற்றைய தினம் அதனை கூட தவிர்த்துவிட்டதாகவும் தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத்துறை வந்து சென்றதை அவரால் ஜீரணிக்கமுடியவில்லை எனவும் கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
இதனிடையே நாளை கோவையில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் சற்று காட்டமாக ஒரு பிடி பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications