ஐயா உங்களை மூத்த அண்ணனாக பார்க்கிறேன்: நிதியுதவி அளித்த முதல்வரிடம் உருகிய எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் மனைவி
ரோந்துப்பணியின்போது ஆடு திருடியவர்களை பிடிக்கும் முயற்சியில் அவர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட திருவெறும்பூர் நாவல்ப்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்துக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி ரூ.1 கோடி இழப்பீட்டு தொகையை முதல்வர் வழங்கினார். மூத்த அண்ணனாக உங்களை பார்க்கிறேன் என அப்போது பூமிநாதன் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள சோழன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் இவர் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
கடந்த 20 ஆம் தேதி ரோந்து பணியில் இருந்த பொழுது அதிகாலையில் ஆடுதிருடிச் சென்றவர்களை விரட்டி கொண்டு கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி அருகே பிடித்து விசாரணை நடத்தும்போதே ஆடு திருடியவர்கள் பூமிநாதனை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.

தமிழகத்தை உலுக்கிய இந்த கொலைச்சம்பவம் குறித்து உடனடியாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக உத்தரவிட்டார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். அவரது உடல் அடக்கத்திற்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பூமிநாதன் இல்லத்துக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் நேரில் சென்று பூமிநாதன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு அவரது மனைவி கவிதா மகன் குகன்பிரசாத் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். டிஜிபி சைலேந்திரபாபுவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார்.
பூமிநாதன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வீரமரணம் அடைந்துள்ளார். அவர் தமிழக முதல்வர் பதக்கம் பெற்றுள்ளார் தீவிரவாத தடுப்பு கமாண்டோ பயிற்சி பெற்றுள்ளார். கடமை உணர்வுடன் வீரமும் விவேகத்துடன் செயல்பட்டு உள்ளார். 15 கிலோமீட்டர் தூரம் ஆடு திருடர்களை விரட்டி சென்றதோடு அவர்களை பிடித்து அவரிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து பாதுகாப்புடன் நடந்து கொண்டார்.

சட்டப்படி தான் அவர் நடந்துள்ளார். சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது முக்கிய குற்றவாளி தாக்குதல் நடத்துவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தப்படும் பூமிநாதன் வீர மரணம் அடைந்தார்" என்று டிஜிபி பேட்டி அளித்தார்.
வீரமரணம் அடைந்த பூமிநாதன் குடும்பத்தாரை தலைமைச் செயலகம் அழைத்த முதல்வர் ஸ்டாலின் பூமிநாதன் மனைவி, மகனிடம் ரூ.1 கோடிக்கான இழப்பீட்டுத்தொகையை வழங்கினார். முதல்வருக்கு பூமிநாதன் குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications