பாலியல் சில்மிஷம்.. பற்றி எரியும் கலாஷேத்ரா விவகாரம்.. ஹரிபத்மன் மீதான வழக்கில் இன்று விசாரணை
சென்னை: கலாஷேத்ரா முன்னாள் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையானது மத்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் ருக்மிணி தேவி நுண்கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த 30ம் தேதி கல்லூரி வளாகத்திற்குள் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியது.

பின்னர் அக்கடிதத்தை திரும்பப்பெற்றுக்கொண்டது. அதேபோல மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தலைமையில் விசாரணை தொடங்கியது. ஆனால், கல்லூரி நிர்வாகம் மறுபுறம் மற்றொரு விசாரணை கமிட்டியை அமைத்தது. அதாவது, முன்னாள் டிஜிபி, முன்னாள் நீதிபதி மற்றும் மருத்துவர் என மூவர் இந்த கமிட்டியில் இடம்பெற்றிருந்தனர். மகளிர் ஆணையம் விசாரணையை கையில் எடுத்துள்ளபோது கல்லூரி நிர்வாகம் ஏன் விசாரணை குழுவை அமைக்க வேண்டும்?
இந்த விவகாரத்தை நீர்த்துப்போக செய்யும் விதமாகதான் புதிய விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது என மாணவிகள் குற்றம்சாட்டினர். மட்டுமல்லாது பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் செய்ய போனால் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் திடீரென புதிய விசாரணை குழு அமைக்க எங்கிருந்து யோசனை வந்தது? என்று மாணவிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அதுபோல முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு காவல் நிலையத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ஆனால் ஹரி பத்மன் தலைமறைவாகிவிட்டார். இருந்தும் விடாமல் துரத்தி அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம் இந்த விவகாரத்தில் ஏதோ அரசியல் இருக்கிறது என முன்னாள் மாணவியான பிக்பாஸ் அபிராமி பேட்டியளித்துள்ளார்.
அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் சண்டையில் இதுபோன்று பொய்யான அவதூறு பரப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதேபோல தனது கணவர் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட ஹரி பத்மனின் மனைவி திவ்யா பத்மன் புகார் அளித்துள்ளார். புகாரில், "பேராசிரியர்கள் நிர்மலா நாகராஜன் மற்றும் நந்தினி நாகராஜன் புகாரின் பேரில் எனது கணவரை சிக்க வைக்க பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்று திவ்யா பத்மன் கூறியுள்ளார். இந்நிலையில் ஹரி பத்மன் மீதான புகார் மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications