அரசுக்கு எதிராக போலீசாரும் போராடும் நாள் விரைவில் வரும்.. அசுதோஷ் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு
சென்னை: டிஜிபி அசுதோஷ் சுக்லாவை மண்டபம் அகதிகள் முகாமிற்கு தமிழக அரசு இடமாற்றம் செய்திருப்பது, பழிவாங்கும் செயல் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததையடுத்து. இதனையடுத்து தேர்தல் டிஜிபியாக இருந்த அசுதோஷ் சுக்லாவை அதிரடியாக மண்டபம் முகாமுக்கு மாற்றப்பட்டார். மேலும் 4 டிஜிபிக்கள் உள்பட 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கடந்த இரு நாட்களுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதில் நேர்மை அதிகாரி என பெயர் பெற்ற அசுதோஷ் சுக்லாவின் இடமாறுதல், காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. தேர்தலின் போது ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக அவர் செயல்படவில்லை என அரசு அவரை பணியிடமாற்றம் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
கரையில் மனைவி வீடியோ எடுக்க.. மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி 3 பேரும் பலி
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க போராடிய அசுதோஷ்
முன்னதாக தஞ்சையில் தனியார் பல்கலைகழகம் ஒன்று சிறைச்சாலை அமைக்க ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தில், 30 ஏக்கர் கையகப்படுத்திவிட்டதாகப் புகார் எழுந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு அங்கு கல்லூரியும் இயங்கி வருகிறது. இந்த இடத்தை மீட்க, சிறைத்துறை தலைவர் என்ற முறையில் அசுதோஷ் சுக்லா, சட்ட ரீதியாக கடுமையாக முயற்சித்துள்ளார். ஆனால், பணமற்றும் அதிகார பலம் காரணமாக இடத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
சிறைத்துறையிலிருந்து மாற்றம்
இந்த நிலையில் தமிழகத்தில் சமீபத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த நிலவிவகாரத்தில் அவர் தலையிடாமல் இருக்க பண வர்க்கம் தலையிட்டு, சுக்லாவை வேறுபணிக்கு மாற்ற ஆளும் தரப்பை நிர்பந்தித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிக்கு மாற்றப்பட்டார் அசுதோஷ் சுக்லா. சிறைத் துறை தலைவராக இருந்த அசுதோஷ் சுக்லா, தேர்தல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார்.
அசுதேஷ் சுக்லாவிற்கு கிடைத்த பரிசு
பிரதமர் மோடியின் பதவியேற்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய முதல்வர் தேர்தல் தோல்வி குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் டிஜிபி அசுதோஷ் சுக்லா உள்ளிட்ட சில ஐபிஎஸ் அதிகாரிகளால் ஆளுங்கட்சிக்கு குடைச்சல் தான் என்றும், அவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படவில்லை என்றும் சரமாரியாக புகார் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதில் தேர்தல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்ட அசுதோஷ் சுக்லாவிற்கு கிடைத்த பரிசு தான் மண்டபம் அகதிகள் முகாம் உயரதிகாரி பொறுப்பு. மேலும் சுக்லா அடுத்த டிஜிபி-யாக வருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகம் இருந்தது. இந்நிலையில்தான் தேர்தல் பணிக்கு பிறகு தற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
டார்ச்சர் செய்ய வேண்டுமா.? மண்டபம் முகாமிற்கு தூக்கியடி
அசுதோஷ் சுக்லாவின் இடமாற்றத்திற்கு முன்னாள் காவல்துறை அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர் மண்டபம் முகாமில் 20 மாதங்கள் பணியாற்றிய அனுபவத்தை முன்னாள் டிஜபியான ஷியாம் சுந்தர் பகிர்ந்துள்ளார். மண்டபம் முகாமில் ஒரு உயரதிகாரிக்கு முதலில் வேலையே இருக்காது என்பதோடு மட்டுமல்லாமல் அங்கு அடிப்படை வசதிகளும் கிடையாது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒருவரை பழிவாங்க நினைத்தால் உடனடியாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு மாற்றி அவரை மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதை ஆளுங்கட்சியினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். குடும்பத்தை பிரிந்திருப்பது ஒருபுறம் ஊதியமும் குறைவு இது போக அங்கு வேலையும் இருக்காது ஆக மொத்தத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவது மட்டும் தான் மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்வதால் ஏற்படும் என விரிவாக எடுத்து கூறினார்.
தண்ணியில்லா காட்டிற்கு தூக்கியடிப்பது சரியா
காவல்துறை சட்டப்படி ஒர் பணியிடத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது காவல் அதிகாரிகள் பணிபுரிய வேண்டும். இந்த சட்டத்திற்கு புறம்பாக டிஜிபி அசுதோஷ் சுக்லாவின் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் காவல் அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர். இவ்விகாரத்தில் மேலும் கருத்து கூறியுள்ள சில முன்னாள் காவல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் என ஆளுங்கட்சியினர் யார் என்ன கூறினாலும் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இப்படி தான் தண்ணியில்லா காட்டிற்கு தூக்கியடிப்போம் என்கிற ரீதியில் செயல்பட்டால் எவ்விதத்தில் நியாயம் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
விரைவில் போலீஸாரும் போரடும் நிலை வரும்
காவல்துறைக்கு உரிய விதிகளை பின்பற்றாமல் ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் இருந்தது போலவே அடி என்றால் அவர்கள் அடிக்க வேண்டும், உதை என்றால் அவர்கள் உதைக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்ப்பது தான் முறையா என வினவியுள்ளனர். ஆளும் அரசுகள் காவல்துறையினரை இப்படி நடத்தினால், போலீஸாரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.