தமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா?.. பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில்
சென்னை: தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி தொடங்கிய ஊரடங்கு தொடர்ந்து 100 நாட்களை கடந்து அமலில் உள்ளது. தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனஅறிவக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிகள் கல்லூரிகள் கடந்த 100 நாட்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளன. புதிய கல்வியாண்டு துவங்கிவிட்ட நிலையில, தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி வருகின்றன. ஆனால் அரசு பள்ளிகளில் ஆன் லைன் கல்வி கற்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் அரசுபள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக அல்லாமல், தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களின் கல்வி சுமையை குறைப்பதற்காக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை 30 சதவீத பாடங்களை மத்திய அரசு குறைத்துள்ளது.
இதேபோல் தமிழகத்தில் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறத. இந்நிலையில் இது பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications