தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என தமிழக அரசு கருதுகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
சென்னை: நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது எனவும், நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது என சட்டபேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது.
Recommended Video

2022 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி இந்த கூட்டத்தில் முதன் முதலாக உரை நிகழ்த்தினார்.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் சென்னை இசைக்கல்லூரி இசைக்கலைஞர்கள் நேரடியாக தமிழ்தாய் வாழ்த்தை பாட கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழக ஆளுநராக ஆர்என் ரவி பொறுப்பேற்ற பிறகு தனது உரையை தொடங்கிய ஆளுநர் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து ஆளுநர் உரையில் நீட் தேர்வு குறித்த முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தது. நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது எனவும், நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது எனவும், நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பேசினார்.
தொடர்ந்து முதலமைச்சரின் முயற்சியால் மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறிய ஆளுநர், சிறுபான்மையினர் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது எனக் கூறினார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் உள்ள நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடரில், நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications