ரப்பர் செருப்பு.. கசங்கிய உடை! மெட்ரோ ரயிலில் தடுக்கப்பட்ட தொழிலாளர்கள்.. விளக்கமளித்த நிர்வாகம்
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கூலி தொழிலாளர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டதுதான் இந்த சென்னை மெட்ரோ அமைப்பு. இது தற்போது புளூ லைன் 1 மற்றும் கிரீன் லைன் 2 என இரண்டு பயன்பாட்டு மெட்ரோ பாதைகளையும் மூன்று கட்டுமானப் பாதைகளையும் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், மெல்ல இந்த எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது.

இதனால் பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை மற்றும் கூடுதல் ரயில்கள் என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தது. எனவே சென்னை மக்களின் வாழ்க்கையில் மெட்ரோ ரயில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை சென்ட்ரலிலிருந்து நந்தனம் செல்ல மெட்ரோ ரயிலில் கட்டுமான கூலி தொழிலாளர்கள் ஏற முயன்றிருக்கிறார்கள். ஆனால் நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறது. இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து அவினாஷ் எனும் x சோஷியல் மீடியா பயனாளர் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இதற்கு மெட்ரோ நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, "இன்று காலை கட்டிட தொழிலாளர் பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து நந்தனம் வரை பயணித்திருக்கின்றனர். பயணத்திற்கு முன்னதாக அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணம் அவர்கள் கூர்மையான பொருட்களை வைத்திருந்ததால்தான்.
ஸ்குரூபார் போன்ற கூர்மையான கருவிகளை அவர்கள் தங்களுடன் எடுத்து வந்திருந்தனர். மெட்ரோவில் கூர்மையான பொருட்களுக்கு அனுமதி கிடையாது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்கான தடுக்கப்பட்டனர். பின்னர் அந்த கருவிகளை பத்திரமாக துணியை கொண்டு மூடிய பின்னர் அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்" என்று விளக்கமளித்திருக்கிறது. என்னதான் மெட்ரோ ரயில் விளக்கமளித்திருந்தாலும், நிர்வாகத்தின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் புறநகர் ரயில் சேவை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். கட்டிட பணியாளர்களும், கூலி தொழிலாளர்களும் பயணிக்கிறார்கள். ஆனால், அவர்கள் எடுத்துச் செல்லும் பொருட்களால் யாருக்கும் எந்த ஆபத்தும் இதுவரை ஏற்பட்டதில்லை. இப்படி இருக்கையில், கூர்மையான பொருட்களை வைத்திருந்தாலே அவர்கள் ஆபத்தானவர்கள் என முடிவு செய்து அவர்களை தடுத்து நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? என்றும் சோஷியல் மீடியா பயனாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதேபோல மெட்ரோ தொடங்கப்பட்டபோதே அது சாமானிய மக்களுக்கானதாக இருக்கவில்லை. கட்டணங்கள் அதிகமாகவே இருந்தன, மெட்ரோ மட்டுமல்லாது சென்னையின் தோற்றமே வேமாக மாறி வருகிறது. அடித்தட்டு மக்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி புறநகருக்கு துரத்தப்படுகிறார்கள். இப்படியே போனால் சென்னை சாதாரண மக்களுக்கானதாக இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications