வீட்டுக்கே சென்று வெட்டிக் கொல்லப்பட்ட டிவி சேனல் நிருபர்.. மார்க்சிஸ்ட், டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை: கஞ்சா வியாபார சமூக விரோத கும்பலால் தொலைக்காட்சி செய்தியாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் சோமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் தொடர்ந்து கொலை மிரட்டலுக்கு உள்ளாகி வந்துள்ளார். இருந்தபோதிலும் துணிச்சலாக செயல்பட்டு வந்துள்ளார் .
தனக்கு இருக்கும் கொலை மிரட்டல் அச்சுறுத்தல் குறித்து சோமங்கலம் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கக்கோரி உள்ளார். ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சமூக விரோதிகள் இவரை கொல்ல பலமுறை முயற்சித்தும் தப்பித்த நிலையில் நேற்று இரவு, புது நெல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கே கொலையாளிகள் சென்று அவரை வீட்டிற்கு வெளியே வரவழைத்து வெட்டி சாய்த்து உள்ளனர். செய்தியாளர் மோசஸ் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்த கொடூர நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மோசஸ் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கையினை உடனடியாக எடுத்திருந்தால் அவரை பாதுகாத்து இருக்க முடியும். இந்த சம்பவத்தில் சமூக விரோதிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் ரகசிய கூட்டு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது என்பதற்கு இந்த கொலைச்சம்பவமே எடுத்துக்காட்டு
சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்.. டிச.2ம் தேதிக்கு வழக்கு விசாரணை- ஹைகோர்ட்
தமிழக காவல்துறை உடனடியாக இந்த கொலை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், தமிழகத்திலுள்ள பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செயல்பட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது. கொலையுண்ட பத்திரிகையாளர் மோசஸ் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும், இந்த கொலைக்கு, கண்டனம் தெரிவித்துள்ளனர். இதேபோல, ஸ்ரீபெரும்புதூர் அருகே தமிழன் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசஸ், கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டபோதே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் படுகொலையைத் தடுத்திருக்கலாம்.
இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து தண்டனை பெற்றுத்தருவதிலாவது காவல்துறை போதிய கவனம் செலுத்தவேண்டும். கொல்லப்பட்ட செய்தியாளர் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கிடவேண்டும். மோசஸ் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.