சூழும் மழை மேகங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை அப்டேட்!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டின் 7 கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம்(ஜன.27) உருவானது. இதன் காரணமாக ஜனவரி 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பரவலான பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இன்றே தாழ்வு மண்டலமாக வலுபெறும் தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மழை
மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக்கடலிலிருந்து மெல்ல மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி 27ம் தேதி உருவானாலும் தமிழ்நாட்டில் ஜன.27,28 ஆகிய தேதிகளில் எங்கும் மழைப்பொழிவு ஏற்படவில்லை. ஆனால் இன்று(ஜன.29) முதல்தான் மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
குறிப்பாக கடலோர மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் அடுத்த மூன்று மணி நேரத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை என 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று பூமத்திய ரேகையையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள், அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே சுமார் 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும்,
எனவே இன்று இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் பெரும்பாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், 30ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மெல்ல மெல்ல வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 1ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் பின்னர் இலங்கை கடற்பகுதியை சென்றடையும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.