நீட் விலக்கு மசோதா விவகாரம்.. மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம்.! ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நீட் நுழைவு தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு கோரிய மசோதாக்களை நிராகரித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக, தமிழக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்துள்ள செயல் கூட்டாட்சி தத்துவத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் கைகொட்டி கேலிகூத்தாக்கும் செயல். கிராமப்புற மாணவர் நலனை துச்சமென மதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது
நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்துள்ள விவகாரம், ஏற்கனவே முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் தெரிந்துள்ளது. ஆனாலும் மசோதா நிராகரிக்கப்பட்ட தகவலை தமிழக மக்களுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை.
நீட் விலக்கு மசோதா நிராகரிப்பை தெரிவிக்காமல் தமிழக அரசு மறைத்துள்ளது. தற்போது 27 மாதங்களுக்கு பிறகு நீட் தொடர்பான மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது வேதனை அளிக்கிறது.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் மசோதாக்களை நிராகரிக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். சமூக நீதியையும் கிராமப்புற மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும்.
இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications