ஒரு நிமிஷம் தலை அப்படியே சுத்திருச்சு..விக்கல் வர வைக்கும் சிக்கன் விலை..முட்டை தான் இந்த வார ஆறுதல்
சென்னை: தமிழகத்தில் காய்கறிகள் விலை உயர்வு ஒரு பக்கம் குடும்பத் தலைவிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று சிக்கன் விலையும் இறைச்சி பிரியர்களை அதிர வைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே நன்றாக தூக்கம், மதியம் இறைச்சி, தொலைக்காட்சிகளில் படம், மாலை நேரத்தில் கிரிக்கெட் என்பதுதான் பலருக்கும் வாடிக்கை

ஞாயிற்றுக்கிழமைகளில் எது பட்டியலில் இருக்கிறதோ இல்லையோ இறைச்சி கண்டிப்பாக இருக்கும். அது கோழிகறியாகவோ ஆட்டு இறைச்சியாகவோ முட்டையாகவோ மீனாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம். ஆனால் கறியில்லா ஞாயிறு இறைச்சி பிரியர்களின் நரகம் என்று கூட சொல்லலாம்.
தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது . பொதுவாக கோடைக் காலம் என்றாலும் மழைக் காலம் என்றாலும் காய்கறியின் விலை விண்ணை தொடுவது வழக்கம். தற்போது தக்காளி, பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தக்காளி விலை 70 ரூபாயை கடந்திருக்கிறது. இது விரைவில் 100 ரூபாயை தொடும் என கூறப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
வரத்து குறைவு, இடைத்தரகர்களின் தலையீடு ஆகியவை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர். காய்கறி சாம்பார் வைக்கும் காசில் கறி வாங்கி சாப்பிட்டு விடலாம் என்பது பலரது குரலாக இருக்கிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று இறைச்சி பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் நாளாகவே ஆரம்பித்திருக்கிறது. தற்போதைய சூழலில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சிக்கன் 270 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எலும்பில்லாத கறி 300 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. கறிக்கோழி உயிருடன் 130 ரூபாய்க்கும், கறியாக 170 ரூபாய்க்கும் மொத்த விற்பனையில் விற்பனை செய்யப்படுவது இறைச்சிப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
வழக்கம்போல் ஆட்டு இறைச்சியும் 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் முட்டை வாங்கி சாப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை கறி தாகத்தை தணித்துக் கொள்ளலாம் என்கின்றனர் இறைச்சி பிரியர்கள். அதே நேரத்தில் மீன்கள் ஓரளவு குறைந்திருக்கிறது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் நேற்று கடலுக்குள் சென்று நிலையில் ஆழ்கடல் மீன் பிடிப்பை தவிர ஃபைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்றவர்கள் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் விற்பனை களைகட்டி உள்ளது.
முதல் தர வஞ்சரம் 700 ரூபாய்க்கும், இரண்டாம் தர வஞ்சரம் 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதே போல கொடுவாய், சீலா, பாறை, விலை மீன் உள்ளிட்டவை 300 முதல் 500 ரூபாய் வரை விற்பனையாகிறது. டேம் மீன்கள் கிலோ 150 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை வகைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இதன் காரணமாக காய்கறி வைத்தாலும் சரி அல்லது கறிகளை வைத்து சமைத்தாலும் சரி இல்லத்தரசிகளுக்கு என்னவோ ஆயிரம் ரூபாய் இருந்தால் தான் ஞாயிற்றுக்கிழமையை கடத்த முடியும் என்பது போல இருப்பதாக புலம்புகின்றனர். மேலும் இந்த விலை உயர்வை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் அதிக அளவில் உலாவி வருகிறது.












Click it and Unblock the Notifications