ஓடிப்போன மழைநீர்.. பல இடங்களில் தேங்கவே இல்லை.. சென்னை மழை குறித்து ககன்தீப் சிங் பேடி விளக்கம்
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய பல இடங்களில் இன்று தண்ணீர் தேங்கவில்லை. சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது. தற்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கனமழை
சென்னை எழும்பூர், வேப்பேரி, பெரிமேடு, திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தியாகராய நகர், ஜி.என் செட்டி சாலை, மாம்பலம், கொளத்தூர், பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக்நகர், ஈக்காட்டு தாங்கல் சைதாப்பேட்டை கிண்டி, திருவான்மியூர் உள்பட நகரின் பெரும்பாலான இடங்களில் கனமழை நீடித்தது. இதேபோல் மேலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வேகமாக வடிந்தது. சில இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. அதோடு மழைநீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது கடந்த ஆண்டு பாதிப்பை ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.

கைக்கொடுத்த பணி
சென்னையில் வழக்கமாக அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவழையில் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கும். பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இதனால் இந்த முறை வடகிழக்கு பருவழையை சமாளிக்கவும், வெள்ள பாதிப்பை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை 2.0 திட்டத்தில் வடிகால் பணிகள், தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இது தற்போது சென்னைக்கு கைக்கொடுத்துள்ளது. இந்த பணிகளால் சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்காமல் வடிந்துள்ளது.

8 மாதங்களாக பணி
இந்நிலையில் சென்னை மழை பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 8 மாதங்களாக அனைத்து மண்டலங்களிலும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. மழை நீர் வடிகால் சார்ந்த பணிகள் இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கப்பட்டது.

மோட்டார் பம்புகளால் அகற்றம்
இதனால் பொதுவாக மழை நீர் தேங்கி நிற்கும் இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. சில இடங்களில் குறைவாக தேங்கி உள்ளது. சிக்கமால் காலனியில் வழக்கமாக தண்ணீர் தேங்கும். இதனால் அங்கு மோட்டார் பம்புகள் அதிகளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு மழைநீர் தேங்கவில்லை. மழைநீர் தேங்கிய இடங்களிலும் மோட்டார் பம்புகள் பயன்படுத்தி மழைநீரை வெளியேற்றி வருகிறோம். மேலும் சென்னை ராஜமன்னார் சாலையில் எப்போதும் மழை நீர் நிற்கும். 3 முதல் 4 அடி வரை தண்ணீர் தேங்கும். ஆனால் தற்போது தண்ணீர் தேங்கவில்லை.

நல்ல பலன் கிடைத்துள்ளது
தற்போதைய சூழலில் மழைநீர் தேங்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு தண்ணீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைககளை எடுத்து வருகிறோம். கடந்த 6 முதல் 8 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பணிகளால் பல இடங்களுக்கான பலன் நன்றாகவே கிடைத்துள்ளது. இது சந்தோஷமாக இருக்கிறது. சில இடங்களில் திட்டமிட்ட பணியின் பலன் முழுவதுமாக கிடைக்கவில்லை. இதனை மாநகராட்சி அதிகாரிகள் பார்த்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

கண்காணிப்பு குழு
சுமார் 2 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்காணித்து வருகிறோம். மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக நீண்ட கால பிரச்சினைகள் ஓரளவுக்குச் சரியாகி உள்ளது. கனமழை பெய்த போதிலும், பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை. மழைக் காலத்தில் சில சமயங்களில் இலை, தழைகள், குப்பைகளால் வடிகாலில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மழை நீர் தேங்க இதுவும் ஒரு காரணம். இதைக் கண்காணித்துச் சரி செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications