”போராடடா நீ வெல்லலாம்” 2004 டூ 2022.. ஓயாத உழைப்பு.. பீனிக்ஸ் பறவையாய் வந்த தினேஷ் கார்த்திக்!
சென்னை: நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 37 வயதாகும் தினேஷ் கார்த்திக். 2004ல் இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று தொடங்கிய அவரது போராட்டம், 2022 வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்திய அணியின் நம்பிக்கை மிக்க இளம் வீரராக அறியப்பட்டவர் தான் தினேஷ் கார்த்திக். உள்ளூர் ஸ்ட்ரீட் கிரிக்கெட் முதல் ரஞ்சி டிராபி வரை எந்த ஆட்டமாக இருந்தாலும், தனது பெயரை அழுத்தமாக பொறித்து வருபவர். தினேஷ் கார்த்திக் பற்றிய செவி வழி செய்திகளும் அவர் பற்றிய எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் இன்னுமொரு காரணம்.
சென்னை மைதானங்களில் கிரிக்கெட் விளையாடிய பலரும் தினேஷ் கார்த்திக்கிற்கு பந்துவீசி இருப்பார்கள். ஏன், சில நாட்களில் தினேஷ் கார்த்திற்கு 2 ஓவர்கள் வீசுவதற்காக மைதானங்களில் விளையாடும் பசங்களை கூட்டிச் சென்ற காட்சிகள் எல்லாம் நடைபெறும். தினேஷ் கார்த்திக்-ற்கு 2 ஓவர்கள் வீசினால் 10 ரூபாய் வழங்கப்படும் என்று நண்பர்கள் கூறி கேட்டதுண்டு. இதனால் இந்திய அணியின் எதிர்காலமாக தினேஷ் கார்த்திக் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும்.
சிராஜ் எங்கே? உம்ரான் மாலிக் எங்கே? இந்திய அணியில் இஸ்லாமியர்கள் புறக்கணிப்பா? கொதிக்கும் ஃபேன்ஸ்!
தொடக்கம்
அதற்கேற்றாற்போல் 2004ல் இந்திய அணியில் இடம்பிடித்து எல்லோரின் கவனத்தையும் தினேஷ் கார்த்திக் திருப்பினார். ஆனால் சில தொடர்களில் ஏற்பட்ட ஃபார்ம் அவுட் காரணமாக அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தான், தோனி என்னும் சுனாமி இந்திய அணிக்குள் வந்தது. அந்த சுனாமியின் அபரிவிதமான ஆட்டத்தால், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர்களே தேவை இல்லை என்ற நிலை உருவானது. ஆனால் தினேஷ் கார்த்திக் தனது முயற்சியை கைவிடவில்லை.
சொந்த வாழ்க்கை
டெஸ்ட், ஒருநாள், டி20 என்று ஏதேனும் ஒரு தொடரில் இந்திய அணிக்காக அவ்வப்போது விளையாடி வந்தார். இதனால் தினேஷ் கார்த்திக்கின் பெயரை ரசிகர்கள் மறக்காமல் இருந்தனர். இதனிடையே சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் குழப்பம், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையையே சுக்குநூறாக்கியது. அதில் இருந்து வெளிவர முடியாமல் சில ஆண்டுகள் தவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மீண்டும் பழையபடி கிரிக்கெட்டை தொடர முடிவு செய்தபோது, தினேஷ் கார்த்தி உடன் யாரும் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்து மும்பை கிளம்பினார். அங்கே இருந்த ஒரு பயிற்சியாளரை சந்தித்து, அவர் கொடுத்த இடத்தில் வாழ்ந்து மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டெடுத்தார். ஆனால் அவர் நினைத்தபடி இந்திய அணியில் இடம்பிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை.
ஐபிஎல் தொடர் காரணமாக எக்கச்சக்க விக்கெட் கீப்பர்கள் போட்டியில் இருந்தனர். இளம் வீரர்கள், சீனியர் வீரர்கள், ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் என அனைவரையும் விடவும் தினேஷ் கார்த்திக் ஒரு படி மேல் இருக்க வேண்டிய சூழல் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அவர் போட்டிபோட்டது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனியின் இடத்திற்கு. ஆனால் எல்லாவற்றையும் கடந்து இந்திய அணிக்குள் இடம்பிடித்தார்.
நிதாஸ் கோப்பை
நிதாஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு முன் விஜய் சங்கரை களமிறக்கிய போதும், அசராமல் பின் வந்து ஆட்டத்தை முடித்து கொடுத்தார். இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சில தருணங்களில் அதுவும் ஒன்று. இதன்மூலம் அவ்வபோது இந்திய அணிக்குள் வருவதும், போவதுமாய் இருந்த தினேஷ் கார்த்திக், அன்று முதல் தனக்கான இடத்தை பீரங்கி மூலம் இடித்து தக்கவைத்துக் கொண்டார்.
2019 உலகக்கோப்பை
கிட்டத்தட்ட கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவுவை நெருங்கும் சூழலில், இந்திய அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அவரின் கனவாக இருந்தது. ஆனால் 2019 உலகக்கோப்பையில் அவருக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாததும், முக்கிய ஆட்டத்தில் ஆட்டமிழந்ததும் அவரின் கிரிக்கெட் கனவை ஒட்டுமொத்தமாக முடிவுக்கு கொண்டு வந்தது.
வர்ணனையாளர்
இதனைத்தொடர்ந்து கிரிக்கெட்டில் இருந்து விலகி, வர்ணனையாளராக பல்வேறு புதிய வாழ்க்கையை தொடங்கினார் தினேஷ் கார்த்திக். இன்னும் சொல்லப்போனால் கிரிக்கெட்டில் கிடைத்ததை விடவும், அதிக பாராட்டுகளும், வாழ்த்துகளும் அவருக்கு அப்போது கிடைத்தது. கிட்டத்தட்ட சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்றே நினைத்தனர்.
மீண்டும் போராட்டம்
ஆனால் அவ்வளவு எளிதாக தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டை விட்டுவிலகிடவில்லை. டிஎன்பிஎல் தொடருக்கான திருநெல்வேலி, கோவை, சென்னை, சேலம் என்று விளையாடியவர், அடுத்ததாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்காக பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்தார். ஒவ்வொரு போட்டியிலும் மனம் தளராமல் தனது வேலை என்ன, ஃபினிஷிங்கில் களமிறங்கும் போது எப்படி விளையாட வேண்டும் என்று பயிற்சி மேற்கொண்ட அவர், ஐபிஎல் தொடரில் கற்று அறிந்த மொத்த வித்தையையும் பெங்களூரு அணிக்காக களமிறக்கினார்.
ஐபிஎல் தொடர்வர்ணனையாளர்
ஐபிஎல் தொடரின் விளைவு இளம் வீரர்களுக்கான ஆட்டம் என்று பேசப்பட்டு வரும் டி20 அணியில் 37 வயது தினேஷ் கார்த்திக் இடம்பிடித்தார். அதுவும் ஃபினிஷர் ரோலுக்காக. தோனிக்கு முன் தொடங்கிய கிரிக்கெட் பயணம், தோனியின் பயணம் முடிந்தும் இதுநாள் வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
டிகே ட்வீர்
2019 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆட்டமிழந்து தலைகுனிந்து வெளியேறிய தினேஷ் கார்த்திக், இன்று இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பைத் தொடருக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தியை அறிந்து, கனவுகள் நனவானது என்று ட்வீட் செய்தது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நெகிழ்ச்சி
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிரிக்கெட் எப்போதும் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும். இந்திய அணி வெற்றிபெற்றால் நன்றாக வேலை பார்க்கும் சிலர், இந்திய அணி தோல்வியடைந்தால் முகத்தை குனிந்துகொண்டு சோகமாக பணியில் ஈடுபடுவர். சிலருக்கு வீரர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும், மீண்டெலுதலும் வாழ்க்கையில் ஒரு எனர்ஜியை கொடுக்கும். ஒவ்வொரு பிரச்னை வரும் போதும், சில தருணங்களை நினைத்து மீண்டெழுந்து போராடுவார்கள். அவர்களுக்கு கிரிக்கெட் எப்போதும் உணர்வுப்பூர்வமாக ஒன்றாகவே தொடரும். அப்படி தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையை பார்க்கும் அனைவருக்கும், கடைசி வரை போராடுங்கள், கனவுகள் மெய்ப்படும் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு செல்கிறார்.