Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணி வீசிய அதிரடி: விஜயகாந்த் எதிர்த்த திமுகவிடமே சரண்டர்! ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி! லாபக்கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் "யாரோடும் கூட்டணி இல்லை, மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி" என முழங்கி உதயமான தேமுதிக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாகத் தனது பரம எதிரியான திமுகவுடன் கைகோர்த்திருப்பது ஒரு வரலாற்று திருப்பமாகும்.. திமுகவுடன் தேமுதிக இணைந்திருப்பது அக்கட்சிக்கு சாதகமா? பாதகமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்..

திமுக கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ள இந்த முடிவு அக்கட்சிக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் எடுக்கப்பட்ட ஒரு துணிச்சலான நகர்வாகவே பார்க்கப்படுகிறது..

DMDK DMK Premalatha Vijayakanth Edappadi Palaniswami TN Election exclusive 2026

தேமுதிக திமுக கூட்டணி

நீண்டகாலமாக தோல்விகளை சந்தித்து வரும் ஒரு கட்சிக்கு, வெற்றி வாய்ப்புள்ள கூட்டணியில் இணைவது என்பது தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், தேர்தல் களத்தில் மீண்டும் ஒரு அடையாளத்தைப் பெறவும் உதவும் ஒரு சாதகமான அம்சமாகும்..

குறிப்பாக, கடந்த காலங்களில் அதிமுக மற்றும் பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தும் பலன் கிடைக்காத நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுடன் இணைந்தது தேமுதிகவின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது..

இருந்தாலும், இந்த முடிவில் பல சவால்களும் பாதகமான அம்சங்களும் ஒளிந்துள்ளன.. விஜயகாந்த் அன்று கருணாநிதியையும் திமுகவையும் கடுமையாக எதிர்த்துதான் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவிடம் மோதியபோது கூட, திமுகவை அவர் ஒரு மாற்றாகக் கருதவில்லை..

திமுகவிடம் சரண்டர்

இப்படிப்பட்ட ஒரு தீவிரமான அரசியல் பின்புலத்தைக் கொண்ட கட்சி, இப்போது அதே திமுகவிடம் சரணடைவது போன்ற தோற்றம் அதன் தனித்துவத்தை கண்டிப்பாக பாதிக்கக்கூடும்..

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் தோல்விக்கு திமுகவின் தேர்தல் முறைகேடுகளே காரணம் என பிரேமலதா விஜயகாந்த் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.. அப்படிப்பட்ட ஒரு கசப்பான சம்பவத்திற்குப் பிறகு, அதே கட்சியுடன் கூட்டணி வைப்பது தொண்டர்களிடையே ஒருவிதமான மனக்கசப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது..

அரசியல் ரீதியாக பார்த்தால், அதிமுக மற்றும் பாஜகவின் மெகா கூட்டணி முயற்சிக்கு இது ஒரு பெரிய பின்னடைவாகும்.. தேமுதிகவிடம் கணிசமான வாக்கு வங்கி இன்னும் மிச்சமிருப்பதை உணர்ந்தே திமுக இந்த முடிவை எடுத்துள்ளது..

தேமுதிக வருகை

சில தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கும் திமுகவுக்கு, தேமுதிகவின் வருகை அந்த இடைவெளியை நிரப்ப உதவும்.. ஆனால், விஜயகாந்தின் தீவிர விசுவாசிகள் இந்தத் தலைகீழ் மாற்றத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே.. கொள்கையை விட வெற்றி முக்கியம் என்ற நிலைக்குத் தேமுதிக தள்ளப்பட்டிருப்பது, அக்கட்சியின் நீண்டகால லட்சியங்களுக்குப் பாதகமாக அமையக்கூடும்..

தேமுதிகவின் இன்றைய முடிவு ஒருபுறம் வெற்றிக்கான ராஜதந்திரமாகத் தெரிந்தாலும், மறுபுறம் கட்சியின் தனித்துவத்தை இழக்கும் அபாயத்தையும் கொண்டுள்ளது..

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற முனைப்பில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, வரும் தேர்தலில் தேமுதிகவுக்குத் தேர்தல் வெற்றிகளைத் தேடித்தரலாம்..

இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.. தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பது ஒரு மேலோட்டமான தேர்தல் உடன்பாடு மட்டுமல்ல, அது அந்த கட்சியின் கௌரவம் சார்ந்த ஒரு முக்கிய நகர்வாகும்.. எடப்பாடி பழனிசாமி தரப்பு வாக்குறுதி அளித்தபடி மாநிலங்களவை சீட் வழங்காததே தேமுதிகவின் கோபத்திற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது..

ராஜ்ய சபா சீட்

இந்த சூழலில், திமுக ஒருவேளை தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடத்தை வழங்கினால், அது பிரேமலதா விஜயகாந்தின் தலைமைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படும்.. கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் களத்தில் ஒரு வெற்றியைக் கூடப் பதிவு செய்ய முடியாமல் தவித்த தொண்டர்களுக்கு, டெல்லி நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சியின் குரல் ஒலிக்கும் என்பது ஒரு மிகப்பெரிய உற்சாக மருந்தாக அமையும்..

இது தேமுதிகவின் அரசியல் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த உதவுவதோடு, திமுகவுடனான பிணைப்பை மிகவும் பலப்படுத்தும் ஒரு சாதகமான காரணியாக மாறும்..

ஒருவேளை திமுகவும் ராஜ்ய சபா சீட் தராமல் வெறும் சட்டமன்றத் தொகுதிகளோடு தேமுதிகவை நிறுத்திக்கொண்டால், அது அக்கட்சிக்கு ஒரு பெரிய அரசியல் பின்னடைவாகவே முடியும்..

ஏற்கனவே அதிமுகவிடம் ஏமாற்றப்பட்டதாகக் கூறி வெளியே வந்த தேமுதிகவுக்கு, திமுகவிடமும் அதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் அது "பெயருக்காகக் கூட்டணி" என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும்..

அதிமுக எடப்பாடி பழனிசாமி

ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் ஒரு அதிகாரமிக்க பதவியைப் பெற முடியவில்லை என்றால், அது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகும்.. குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக தரப்பினர் "சீட் தராததால் எங்களிடம் இருந்து பிரிந்தவர்களுக்கு அங்கும் அதே நிலைதான்" என்று கிண்டலடிக்க வாய்ப்புண்டு.. இது தேமுதிக தொண்டர்களின் மன உறுதியைக் குலைப்பதோடு, கட்சித் தலைமையின் பேரம் பேசும் திறனையும் கேள்விக்குறியாக்கும் ஒரு பாதகமான விஷயமாகிவிடும்..

எனவே, தேமுதிகவை பொறுத்தவரை மாநிலங்களவை சீட் என்பது வெறும் பதவி மட்டுமல்ல, அது அக்கட்சியின் அரசியல் அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு கவசமாகும்.. திமுக அதனை வழங்கும் பட்சத்தில் தேமுதிகவின் முடிவு ஒரு ராஜதந்திர வெற்றியாகப் போற்றப்படும்.. மாறாக, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டால் அது தேமுதிகவின் அரசியல் எதிர்காலத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு தவறான முடிவாக விமர்சிக்கப்படலாம்..

எப்படியோ, "மூன்றாவது சக்தி" என்ற அந்தஸ்திலிருந்து மாறி, ஒரு திராவிடக் கட்சியின் நிழலில் ஒதுங்குவது என்பது விஜயகாந்த் உருவாக்கிய பிம்பத்திற்கு சவாலான ஒன்றுதான்.. இந்தச் சாதக பாதகங்களுக்கு இடையிலான போராட்டத்தில், தேமுதிகவின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகளிலேயே உள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+