சென்னை மக்களே மேஜர் குட்நியூஸ்.. இந்த மாசமே ஆரம்பிக்கிறாங்க.. ரயில்வே எடுத்த பெரிய முடிவு
சென்னை: சென்னையில் புறநகர் ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை அதிக அளவில் இயக்க வேண்டும் என்றால், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது வழித்தட பணிகள் நடக்க வேண்டும். அந்த பணி இந்த மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார்.

சென்னை மக்களின் நீண்ட நாள் ஆசை என்றால், சென்னை எழும்பூர் மற்றும் கடற்கரை இடையே நான்காவது ரயில் வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்,. தற்போதைய நிலையில் சென்னை தாம்பரம் முதல் எழும்பூர் வரை நான்கு வழித்தடங்கள் உள்ளன. இதேபோல் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரை மூன்று வழித்தடங்கள் உள்ளன. இதேபோல் சென்னைக்குள் கடற்கரை முதல் எழும்பூர் வரை 3 வழித்தடங்களே உள்ளன.நான்கு வழித்தடம் இந்த வழித்தடத்தில் அமைந்தால் இன்னும் கூடுதலான ரயில்களை இயக்க முடியும். அண்டை மாநிலமான ஆந்திராவிற்கும், வட சென்னை பகுதிக்கும் ரயில் போக்குவரத்து வசதி மேம்படும்.
இந்நிலையில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா சென்னை தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஆந்திர மாநிலம் குண்டூர்-பீபி நகர் இடையே 239 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரட்டை வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விரிவான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரூ.2 ஆயிரத்து 853 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 2027-28-ம் ஆண்டுக்குள் இந்த திட்டப்பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.
குண்டூர்-பீபி நகர் திட்டம் நிறைவு பெற்றால் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி சென்னை வரும் பயணிகள் ரெயிலின் பயண நேரம் ஒரு மணி நேரம் கண்டிப்பாக குறைந்துவிடும். இதேபோல், சரக்கு ரெயில்களில் ஒரு பெட்டிக்கான கட்டணம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை குறைந்துவிடும் என்றார்.
பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வடமாநில பயணி ஒருவரை பெண் டிக்கெட் பரிசோதகர் தாக்கிய விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஸ்வநாத் ஈர்யா, பரிசோதகர் நடந்து கொண்ட செயல் தவறானது என்றும் அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறினார். இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஏற்கனவே டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளிட்ட ரெயில்வே பணியாளர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்கி வருகிறோம் என்றும் விஸ்வநாத் கூறினார்.
சென்னை கடற்கரை-எழும்பூர் வரையிலான 4-வது வழித்தட பணிகள் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய சென்னை கோட்ட மேலாளர், இந்த பணிகளின் போது செயல்படுத்தப்படும் போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
4வது வழித்தட பணிக்காக சென்னை வேளச்சேரி கடற்கரை ரயிலை சேப்பாக்கத்தில் இருந்து இயக்க திட்டமிட்டார்கள். ஆனால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பணிகளை மாற்றுவழிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. அதேநேரம் வேளச்சேரி கடற்கரை ரயில் சேவைக்கு பாதிப்பு இல்லாமல் 4வது வழித்தட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications