பெங்களூரு வாழ் தமிழர்களே.. தீபாவளிக்கு ஊருக்கு வரப்போறீங்களா.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பேருந்தில் பயணிக்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து 20 பேருந்துகள் கர்நாடாகவுக்கு இன்று இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஊருக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றும் நாளையும் பல்லாயிரம் பேர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

16வரை பதிவு தேவையில்லை
தற்போதைய நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வர ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. தற்போது தீபாவளியை முன்னிட்டு நேற்று முதல் 16ம் தேதி வரை பேருந்தில் ஆன்லைன் பதிவு கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில். தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் பேருந்து சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு மாநில போக்குவரத்து நிறுவனங்களால் கோரிக்கை வைத்தன. இதை கவனமாக பரிசீலித்த பின், கர்நாடாகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அரசு அனுமதி
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 6 நாட்களுக்கு அதாவது நேற்று முதல் 16ம் தேதி வரை ஆன்லைன் பதிவு இல்லாமல் இயக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவு ரத்து
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பஸ்களை இயக்குவதற்கு ஆன்லைன் பதிவு தேவையில்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து ஓசூர் வரை பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த உத்தரவைத்தொடர்ந்து முதற்கட்டமாக இன்று 20 பஸ்கள் கர்நாடாகவுக்கு இயக்கப்படுகிறது' என்றார். எனினும் கூடுதல்பேருந்துகள் இயங்கி தமிழகர்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லவும் அரசு ஆன்லைன்பதிவு கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications