செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் மோடி படம் இல்லை.. உயர் நீதிமன்றத்தில் வழக்கு.. தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை: செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் நாட்டை முன்னிறுத்த வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வரும் 28ஆம் தேதி முதல் முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44-வது செஸ் ஒலியம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான "வெல்கம் டு சென்னை" பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இந்தப் பாடலில் முதல்வர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான்களும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்குமாறு பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மெய்யநாதன், எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழ் வழங்கினர்.
மத்திய அமைச்சர்கள் பலருக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்து, செஸ் ஒலிம்பியாட்டுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட'தம்பி' சின்னத்தையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக பாஜகவினர் சென்னையில் சில இடங்களில் தமிழக அரசு வைத்துள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேனர்களில், அந்த பேனர்களின் அளவுக்கேற்ப பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை ஒட்டி வருகின்றனர். குறிப்பாக, பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் பிரதமரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மதுரையிலும் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளில் பிரதமர் படம் இடம் பெறவில்லை. இதை கண்ட இந்து முன்னணியினர் முதலமைச்சரின் படத்திற்கு மேலே பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஒட்டிச் சென்றனர்.
சென்னை அடையாறு பகுதியில் இருந்த பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டிச் சென்றனர். இதையடுத்து அங்கு வந்த பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படம் மீது கருப்பு வண்ண ஸ்பிரே அடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படத்தை சேர்க்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்கண்ணா என்பவர் சார்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் மனு தாக்கல் செய்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் மோடியின் பெயரையும் படத்தையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், பிரதமர் மோடி வருகை 22ம் தேதிதான் உறுதி செய்யப்பட்டது. அதனால், பழைய போஸ்டர்களில் அவர் படம் இல்லை. இன்று தமிழ்நாடு அரசு கொடுத்த விளம்பரங்களில் மோடி படம் உள்ளது, என்று கூறியது.
இதையடுத்து நீதிமன்றம் சொன்ன கருத்தில், சர்வதேச ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்கு பெருமை. பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் நாட்டை முன்னிறுத்த வேண்டும். இதில் ஏன் பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை, என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications