முதல்வர் வேட்பாளர் யார் என்பது கட்சிக்குள் எடுக்கும் முடிவு... சொல்வது ஓ.எஸ் மணியன்
அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு, போரும் நடக்கவில்லை வாரும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது நான்கு சுவருக்குள் கட்சிக்குள் எடுக்கப்படும் முடிவு என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு, போரும் நடக்கவில்லை வாரும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது யாரை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்துவது உள்கட்சி பிரச்னை தலைதூக்கியுள்ளது.
கடந்த மாதம் அமைச்சர்கள் மாறி மாறி முதல்வர் வேட்பாளர்கள் பற்றி கருத்து கூறிய போது அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது. அப்படி பேசினால் கட்சி சார்பில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
தர்மயுத்தம் 2.0? செய்தியாளர்களை நாளை சந்திக்கப் போவதாக ஓபிஎஸ் 'பரபர' அறிவிப்பு
எடப்பாடி பழனிச்சாமி
கூட்டறிக்கை வெளியான பின்னரும் சில அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளர் பற்றி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மக்களின் வரவேற்பை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் என்று தெரிவித்தார் அமைச்சர் ஓ.எஸ் மணியன்.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை
இந்த சர்ச்சைக்கு இடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியானது. மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை தலைமை
இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் அமைச்சர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை குறித்து அமைச்சர் ஓ.எஸ் மணியன் இன்று பதில் அளித்துள்ளார். நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக இப்போதைக்கு இரட்டை தலைமையின் கீழ் செயல்படுகிறது என்று கூறினார்.
போர் நடக்கவில்லை
அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு, போரும் நடக்கவில்லை. வாரும் நடக்கவில்லை என்று கூறிய அவர்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓபிஎஸ் ஐ நியமித்ததும், ஈ.பி.எஸ் ஐ சசிகலா நியமித்ததும் கடந்தகால கதை என்று தெரிவித்தார்.
டி ஆர் பாலு பேராசை
சட்டசபை தேர்தலுக்கு பின் அதிமுக கட்சி தமிழகத்தில் இருக்காது என்ற டி.ஆர் பாலுவின் பேராசை கனவு பலிக்காது என்றும், கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.