"தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கு.." அடுத்து ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர்! ரொம்ப முக்கியம் ஆச்சே
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமலேயே தொடரும் நிலையில், வரும் காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலான பொதுமக்கள் தங்கத்தைத் தான் முதல் சேமிப்பாகக் கருதுகிறார்கள். தங்கம் விலை நீண்ட கால நோக்கில் எப்போதும் அதிகரிப்பதால் தங்கத்தைச் சேமிக்கவே பொதுமக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் எப்படியாவது சிறுக சிறுக சேமித்துத் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதிலேயே உறுதியாக உள்ளனர். ஏனென்றால் ஆபத்தான காலத்தில் தங்கத்தைப் போல நமக்கு எதுவும் உதவாது.
தங்கம்: எதாவது பிரச்சினை என்று ஏற்பட்டால் தங்கத்தைக் கொண்டு போய் எந்த வங்கியில் வேண்டுமானாலும் வைக்கலாம்.. அல்லது எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். இந்த உலகில் எங்குச் சென்றாலும் தங்கத்தை வாங்க ஆள் இருக்கவே செய்வார்கள். இதனால் ஆபத்தான காலத்தில் நிலம், பங்குகள் என எந்த விதத்தில் நமக்கு இருந்தாலும் தங்கம் அளவுக்கு அவை நமக்கு கை கொடுக்காது என்பதை நாம் யோசிக்காமல் சொல்லலாம். கொரோனா காலத்திலும் கூட ஏழை மக்களுக்குத் தங்கமே கை கொடுத்தது.
தமிழ்நாட்டின் பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசனும் தொடர்ந்து இதையே தான் வலியுறுத்தி வருகிறார். தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைந்தது 400 கிராம் தங்கமாவது இருக்க வேண்டும் என்பதையே அவர் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதற்கிடையே தங்கத்தின் விலை இப்போது கடந்த சில காலமாகவே ரூ.5500 என்ற ரேஞ்சிலேயே இருந்து வருகிறது. பெரியளவில் ஏறவும் இல்லை. இறங்கவும் இல்லை.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே வரும் காலத்தில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தங்கம் சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இன்னும் இரண்டு முறை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும். இதனால் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5200 வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், விலை உறுதியாகக் குறையும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் ரஷ்யாவும் சீனாவும் உள்ளே புகுந்து வாங்க ஆரம்பித்தால் விலை குறையாது. எனவே, தங்கம் உறுதியாகக் குறையும் எனச் சொல்ல முடியாது. ஆனால், இப்போதைக்குத் தங்கம் விலை அதிகரிக்காது என்பதை வேண்டுமானாலும் உறுதியாகச் சொல்லலாம்" என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 83ஐ தாண்டிவிட்டது. ரிசர்வ் வங்கி டாலரை விற்கவில்லை என்றால் இதன் மதிப்பு 83.95 வரை செல்லும்.. நான் பல நாட்களாகவே ரூபாய் மதிப்பு குறையும் என்றே தொடர்ந்து சொல்லி வருகிறேன்.
என்ன சொன்னார்: அடுத்த இரண்டு முறை வட்டி விகிதத்தைக் கண்டிப்பாக உயர்த்துவோம் அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது எல்லாம் இந்திய ரூபாய்க்கு கடும் அழுத்தம் தரும். இதனால் தங்கம் இப்படியே தான் இருக்கும். அதாவது சர்வதேச சந்தையில் தங்கம் விலை கொஞ்சம் விழுந்தாலும் ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருவதால்.. இந்தியாவில் தங்கம் குறையுமா எனத் தெரியாது.
அதேநேரம் இது நமக்குத் தங்கத்தை வாங்க ஒரு பொன்னான வாய்ப்பு.. எனவே யாருக்கெல்லாம் 400 கிராம் தங்கம் இல்லையோ.. அவர்கள் உடனடியாக அதை வாங்க இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications