தமிழகத்தில் மீண்டும் முழு லாக்டவுன்?.. சுகாதாரத் துறையின் தெளிவான விளக்கம்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு பொது முடக்கம் போடும் திட்டம் இல்லை என சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் பெருகி வந்த கொரோனா பரவல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்டுக்குள் இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 3 இலக்கத்தில் வந்தது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நாள்தோறும் கொரோனா பாதிப்பு 4 இலக்கத்தில் சில நேரங்களில் 5000-ஐ நெருங்கும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
முழு ஊரடங்கு
இதனிடையே தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் தேர்தல் பிரச்சாரம், பொதுக் கூட்டம், வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் இருந்ததால் கொரோனா பாதிப்பு மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த ஆண்டை போல முழு ஊரடங்கு உத்தரவு போடப்படும் என பரவலாக பேசப்படுகிறது.
ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறை நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விளக்கம்
ஊரடங்கு குறித்து சுகாதாரத் துறை அளித்த விளக்கத்தில் தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் முழு ஊரடங்கு என பரவி வரும் தகவல் வதந்தி. சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த தகவல் பொய்யானது. அத்தியாவசியமற்ற பணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். மற்றபடி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத் துறை விளக்கமளித்துள்ளது.
மாநிலங்களில் முழு ஊரடங்கு?
இதை ஏற்கெனவே ராதாகிருஷ்ணனும் தெளிவுப்படுத்தியுள்ளார். பெரும்பாலும் கொரோனா பரவல் அதிகம் இருக்கும் பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது. மற்றபடி தமிழகம் முழுவதும் ஊரடங்கு என்பது இருக்காது என்றே தெரிகிறது. பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.