எடப்பாடி சொன்னது என்ன? பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? அதிமுக ஜெயக்குமார் பரபரப்பு பதில்
சென்னை: பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மழுப்பலான பதிலை எடப்பாடி பழனிசாமி கூறியதால், மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இந்த நிலையில் பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை.. எப்போதும் கூட்டணி இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி வரும் காலங்களிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அக்கட்சியினர் திட்டவட்டமாக கூறி வந்தனர். லோக்சபா தேர்தலில் இதனால், மும்முனை போட்டி நிலவியது. இதில், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை தழுவியது.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக, பாமகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி கதவை திறந்து வைப்பது, மூடுவது எல்லாம் கிடையாது. அதெல்லாம் மற்ற கட்சிகளில் தான். அதிமுகவை பொறுத்தவரை ஒத்த கருத்து கொண்ட கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து லஞ்ச லாவண்யம் கொண்ட ஆட்சியை அகற்றுவதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் என்பது அவ்வப்போது வரும். அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறுதான் கூட்டணி அமைக்கப்படும்.
தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி சூழல் தெரியவரும். அதற்கு முன்பு என்ன சொன்னாலும் அது நிற்காது" என்றார். பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மழுப்பலான பதிலை எடப்பாடி பழனிசாமி கூறியதால், மீண்டும் பாஜக கூட்டணியில் அதிமுக இணையுமா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.
இந்த நிலையில், இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாஜகவுடன் கூட்டணி இப்போதும் இல்லை. எப்போதும் இல்லை. இன்றும் இல்லை. நாளையும் இல்லை. எப்போதும் இல்லை. இது தான் அதிமுகவின் நிலைப்பாடு.
இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கழகத்தால் முடிவு எடுக்கப்பட்டு, கழக பொதுச்செயலாளரே அறிவித்து விட்டார். எந்த ஒரு அமைச்சராவது பிரதமரை அடிக்கடி சந்தித்து இருக்கிறாரா. முதல்வர்களே பிரதமரை சந்திப்பது என்பது குறைவு தான். ஆனால் ஒரு அமைச்சர் பிரதமரை போய் சந்திக்கிறார். எனவே திமுக தான் பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளது. மறைமுகமாக பாஜகவுடன் ஒரு அண்டர்ஸ்டாண்டில் உள்ளது.
ஆனால் அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுடன் மறைமுக கூட்டணி கிடையாது. ஒட்டுமொத்தமாக கட்சி எடுத்த நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒத்த கருத்து என்றால் என்ன? திமுக என்ற மக்கள் விரோத கட்சியை விரட்டியடிக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் பாஜகவை தவிர்த்து, கட்சிகள் ஒத்த கருத்துக்களோடு வரும் போது அவர்களுடன் கூட்டணி வைப்பது பற்றி அதிமுக தலைமை முடிவு செய்யும்.
இதைத்தான் நேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கள் திரிக்கப்பட்டுவிட்டன. பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. எந்த காலத்திலும் இல்லை. அந்த நிலைப்பாடு எதிர்காலத்திலும் தொடரும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications