"என்னை தூங்க விடாமல் செய்கிறீர்கள்".. முதல்வர் ஸ்டாலின் அப்படி பேசியது ஏன்? பொன்முடி பரபர விளக்கம்
சென்னை: என்னை தூங்க விடாமல் செய்கிறார்கள் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது ஏன் என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதேபோல் பொருளாளர், துணை பொதுச்செயலாளர்கள், பொதுச்செயலாளர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் திமுக உட்கட்சி தேர்தலும் முடிவிற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்களை பற்றி பேசினார். சில திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு, அதற்கு வந்த எதிர்மறை விமர்சனங்கள் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
பொறியியல் கல்லூரிகளில் படிக்க எல்லோருக்கும் இடம் கிடைக்கும்..அமைச்சர் பொன்முடி நம்பிக்கை
கண்டிப்பு
லேசான கண்டிப்பு கலந்த குரலோடு முதல்வர் ஸ்டாலின் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. அதில், பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டதன் மூலம் திமுக பழிக்கு ஆளானது. நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்; கண்ணியமான சொற்களை பயன்படுத்துங்க. நமது கவனத்தை திசை திருப்புவதுதான் எதிரிகளின் ஒரே நோக்கம் என்னை துன்பப்படுத்துவது போல மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன செய்வது.
திமுக
திமுகவினர் பேசியதை வெட்டியும் ஒட்டியும் பரப்புவார்கள். ஆட்சிக்கு வந்த பின் திமுகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது.செல்வாக்கு உயர்ந்திருப்பதுதான் பயத்தை உருவாக்கியிருக்கிறது; நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதே சிந்தனையாக உள்ளது. என் முகத்தை பார்த்தாலே தெரியும், கட்சினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்க விடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவது போல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்
பொன்முடி விளக்கம்
முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு மிகப்பெரிய அளவில் வைரலானது. இதையடுத்து இன்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடியிடம் இதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. என்னை தூங்க விடாமல் செய்கின்றனர் என்று முதல்வர் சொல்லி இருக்கிறாரே, அவர் யாரை குறிப்பிட்டு உள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஸ்டாலின் எப்போதும் மக்களை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார். இரவு பகலாக அவர்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார்.
நினைப்பு என்ன?
மக்களை பற்றித்தான் அவர் நினைப்பு உள்ளது. அவர்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார். எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் நான் சிந்தனையிலேயே இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதன் அடிப்படையில்தான் நான் தூக்கமின்றி இருக்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்று, அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.