பத்திரம் இருந்தும் பலனில்லை! தாசில்தார் அலுவலகம் அதிர்ச்சி உண்மை.. சென்னை நில உரிமையாளர்கள் கவனம்
சென்னை: பட்டா மாறுதல் என்பது நிலம் வாங்கும் ஒவ்வொரு சாமானிய மனிதனும் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும். ஆம், வருவாய்த் துறையின் பதிவேடுகளில் உங்கள் பெயர் ஏறாதவரை, அந்த நிலத்தின் மீது உங்களுக்கு முழுமையான அதிகாரம் இல்லை என்பதே கசப்பான உண்மை. இந்த இடத்தில்தான் பட்டா மாறுதல் என்ற நடைமுறை ஒருவரின் சொத்து பாதுகாப்பிற்கு அஸ்திவாரமாக அமைகிறது.
நிலத்தை விலைக்கு வாங்கி, பல்லாயிரம் ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தி, பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தவுடன் அனைத்தும் முடிந்துவிட்டதாகப் பலரும் நிம்மதி அடைகிறார்கள். ஆனால், அதுதான் ஒரு நில உரிமையாளரின் பயணத்தில் பாதி கிணற்றைக் கடந்த கதை என்பதைப் பலரும் உணருவதில்லை.

பட்டா மாறுதல் முக்கியத்துவம்
பட்டா மாறுதல் என்பது ஒரு நிலத்தின் அல்லது வீட்டின் உரிமையை சட்டப்பூர்வமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றும் மிக முக்கியமான அரசாங்க நடைமுறையாகும்.
நிலத்தை விலைக்கு வாங்கியவுடன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சொத்தைப் பதிவு செய்வது முதல் கட்டம் என்றால், வருவாய்த் துறை பதிவேடுகளில் உங்கள் பெயரை உரிமையாளராகப் பதிவு செய்வது 2வது மற்றும் மிக அவசியமான கட்டமாகும்.
அந்தவகையில், பட்டா என்பது அந்த நிலம் உங்களுக்கே சொந்தம் என்பதற்கு அரசாங்கம் வழங்கும் முக்கியமான வருவாய் ஆவணமாகும். நீங்கள் ஒரு நிலத்தை வாங்கும்போதோ, அல்லது பூர்வீகச் சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்யும்போதோ, அல்லது வாரிசு அடிப்படையில் சொத்து உங்கள் கைக்கு வரும்போதோ பட்டா மாறுதல் செய்வது கட்டாயமாகிறது.
வட்டாட்சியர் அலுவலகம் - விண்ணப்பம்
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது வீட்டில் இருந்தபடியே அரசு வெப்சைட் வழியாகவோ மிக எளிதாக விண்ணப்பிக்க முடியும். இதற்கு நிலத்தின் விற்பனைப் பத்திர நகல், வில்லங்கச் சான்றிதழ், பழைய பட்டா நகல் மற்றும் அடையாளச் சான்று போன்ற அடிப்படை ஆவணங்கள் போதுமானவை.
ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் உங்களுக்கென ஒரு குறிப்பு எண் வழங்கப்படும், அதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்.
சர்வே நம்பர் - கட்டணம்
இதில் 2விதமான நடைமுறைகள் உள்ளன. நீங்கள் ஒரு சர்வே நம்பரில் உள்ள நிலத்தை முழுமையாக வாங்கினால், நிலத்தை அளக்க வேண்டிய தேவை இருக்காது. இதனை உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் என்பார்கள். இதற்கு அரசு விதிப்படி குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது.
மாறாக, ஒரு பெரிய நிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரித்து வாங்கினால், நில அளவையாளர் நேரில் வந்து நிலத்தை அளக்க வேண்டியிருக்கும். இதற்கு உட்பிரிவு பட்டா மாறுதல் என்று பெயர். இதற்கான அரசாங்கக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் நில அளவையாளர் உங்கள் இடத்தைப் பார்வையிட்டு எல்லைகளை உறுதி செய்வார்கள். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வட்டாட்சியர் (Tahsildar) புதிய பட்டாவை அங்கீகரிப்பார்.
நிலம் உரிமையாளர்கள் அறிய வேண்டியது
பட்டா மாறுதல் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. உங்கள் சொத்தின் மீது வங்கி கடன் பெற வேண்டும் என்றாலோ அல்லது அந்த நிலத்தில் வீடு கட்ட அனுமதி கோரினாலோ பட்டா உங்கள் பெயரில் இருப்பது அவசியமாகும். மேலும், எதிர்காலத்தில் உங்கள் நிலத்தை வேறொருவருக்கு விற்க நினைக்கும்போது, பட்டா சரியாக இருந்தால் மட்டுமே அந்த விற்பனை சட்டப்படி செல்லும்.
அரசு நிலம் எடுப்பு போன்ற சமயங்களில் இழப்பீடு பெறுவதற்கும் பட்டாவே முதன்மை ஆதாரமாகத் திகழ்கிறது. எனவே, சொத்து வாங்கிய கையோடு எந்தவிதமான தாமதமின்றி பட்டா மாறுதல் செய்வது உங்கள் சொத்திற்கு நீங்கள் தேடிக்கொடுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பாகும். இதில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் தயக்கமேயில்லாமல் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி தங்கள் பெயருக்குப் பட்டாவை மாற்றிக்கொள்ளலாம்...!!













Click it and Unblock the Notifications