ஐஏஎஸ் ஆபீசர்களாக RSS கும்பல்.. 'நாட்டை பிடித்த ஆக்டோபஸ்' பகீர் கிளப்பிய குமாரசாமி.. ஆமோதித்த திருமா!
சென்னை: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பெருமளவு இந்திய குடிமைப்பணி தேர்வில் வெற்றிப் பெற்று உள்நுழைந்துள்ளதாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திட்டமிட்டு இந்த பணிகளை ஆர்எஸ்எஸ் செய்து வருவதாகவும், இது சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தற்போது இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள்
இந்திய குடிமைப் பணிகளில் தனது சித்தாந்தம் கொண்ட ஆட்களை சேர்ப்பதற்கு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து பயிற்சியளித்து அதனை வெற்றிகரமாக நடத்தியும் காட்டியுள்ளது என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "RSS தொண்டர்கள் அதிக அளவில் இந்திய குடிமை பணியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் நாங்கள் சேகரித்தது கிடையாது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எழுதிய புத்தகத்தில் இது கூறப்பட்டுள்ளது.

4 ஆயிரம் பேர்
அதன்படி கடந்த 2016ல் நடந்த இந்திய குடிமை பணிகளான IAS தேர்வில் மட்டும் RSS தொண்டர்கள் 676 பேர் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த சில வருடங்களில் இதுபோல் திட்டமிட்டு இவர்கள் குடிமை பணியில் தேர்வு செய்யப்பட்டு தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு முழுவதும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் பிரதமர் நரேந்திர மோடி பெயரளவில் மட்டுமே பிரதமராக இருக்கிறார்.

ஆக்டோபஸ் கரங்கள்
நாட்டின் பணிகள் அனைத்தும் RSS தலைவர்களின் தீர்மானங்களின்படிதான் நடக்கிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் வாய்ப்பளித்து அவர்களை மட்டுமே உயர்த்தி விடுவது என்பது சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்" என்று குமாரசாமி குற்றம்சாட்டியிருந்தார். இதனை மேற்கோளிட்டு காட்டிய திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆக்டோபஸ் கரங்கள் மொத்த அமைப்பையும் ஆக்கிரமித்துள்ளதாக அவர் குற்றசம்சாட்டியுள்ளார்.

வளர்ச்சி பாதை
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன் "அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவை மட்டுமின்றி, நீதி மற்றும் நிர்வாகத் துறைகளிலும் RSS-இன் ஆக்டோபஸ் கால்கள் விரவி பரவி, அங்கிங்கெனாதபடி ஒட்டுமொத்த தேசம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. அதன் தாக்கமே குமாரசாமி எழுப்பும் கவலை மிகுந்த கேள்வியாகும்" என்று கூறியுள்ளார்.

பாஜக அமைச்சர்
குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா, "ஆர்எஸ்எஸ் சார்பில் ஒரு ஆயிரம் பணிகள் நடந்து வருகிறது. குமாரசாமி கூறியபடி 4 ஆயிரம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதை வரவேற்கிறோம். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொள்கை நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications