நேராக "அங்கேயே" புறப்பட்டு போன திருமா.. தமிழக அரசியலில் மிக முக்கியமான போட்டோ.. களமிறங்கிய டீம்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு விசிக தலைவர் டாக்டர் திருமாவளவன் முக்கியமான சில தொகுதிகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் வடதமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் கொதிப்பாக இருக்கிறது. தேர்தல் நடக்க இன்னும் 5 நாட்களே உள்ளது. பிரச்சாரம் செய்யவும் இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.
தமிழக கட்சிகள் எல்லாம் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் விசிக கூட்டணி கட்சிகள் சார்பாக எம்பி திருமாவளவன் தீவிரமாக பிரச்சார பணிகளை செய்து வருகிறார்.

எப்படி
இந்த பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக டாக்டர் திருமாவளவன் பண்ருட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்தார். இங்கு திமுக சின்னத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் களமிறங்குகிறார். ஒரு காலத்தில் பாமகவில் இருந்த வேல்முருகன் தற்போது பாமகவின் வடதமிழக வாக்கு வங்கிக்கு குறி வைத்துள்ளார் .

வன்னியர் சங்கம்
முக்கியமாக வடதமிழகத்தில் பாமகவிற்கு இருக்கும் ஜாதி வாக்கு வங்கிக்கு குறி வைத்து வேல்முருகன் காய்களை நகர்த்தி வருகிறார். கடந்த லோக்சபா தேர்தலின் போதே திமுகவிற்காக இவர் செய்த பிரச்சாரம் அந்த கட்சிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அப்போது வன்னியர் வாக்குகள் பெரிய அளவில் திமுகவிற்கு சென்றது .

திமுக
இதனால் தற்போது வேல்முருகனின் வெற்றிக்காக திமுகவினர் இங்கு தீவிரமாக களப்பணிகளை செய்து வருகிறார்கள். இவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று பாமகவும் இங்கு நிர்வாகிகளை களமிறக்கி உள்ளது. இங்கு அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். ஏதாவது செய்து வேல்முருகனை வீழ்த்த வேண்டும் என்பதில் பாமக உறுதியாக இருக்கிறது.

தலித் வாக்கு
இங்கு தேர்தல் களம் சூடாகி உள்ள நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் பண்ருட்டியில் வேல்முருகனை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதிலும் நேற்று பண்ருட்டியில் வேல்முருகனுக்காக திருமா தீவிரமாக பிரச்சாரம் செய்து .. ஒரே மேடையிலும் இவர்கள் ஒன்றாக தோன்றியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

பிளவு
வடதமிழகத்தில் சில இடங்களில் ஜாதி ரீதியான வாக்குகள் பிளவு பட்டு இருக்கும் போது வேல்முருகனுக்காக திருமா இப்படி பிரச்சாரம் செய்வது தேர்தல் களத்தையே புரட்டி போட்டுள்ளது . ஜாதி ரீதியான வாக்கு பிளவு பெரிய அளவில் இதனால் மாற்றம் அடையும். முக்கியமாக பாமகவுக்கு எதிராக இருக்கும் தலித் வாக்குகள் மொத்தமாக வேல்முருகன் பக்கம் திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

புகைப்படம்
இவர் மட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரிய நிர்வாகிகள் டீமும் இங்கு வேலை பார்த்து வருகிறது. அதிலும் வேல்முருகன் கையை திருமா தூக்கும் புகைப்படம் இணையம் முழுக்க பரவி வருகிறது. வடதமிழக அரசியலில் இது குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications